சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்
6.1 திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - முதல் பகுதி
1904
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.
1
1905
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்.
2
1906
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்.
3
1907
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்.
4
1908
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால்
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல.
5
1909
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும்
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து
அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை.
6
1910
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்.
7
1911
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்.
8
1912
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித்
தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித்
தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்.
9
1913
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்.
10
1914
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும்
பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு.
11
1915
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம்.
12
1916
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு
கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி.
13
1917
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.
14
1918
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்
செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்.
15
1919
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்.
16
1920
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார்
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்.
17
1921
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு
ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்.
18
1922
மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம்
நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்.
19
1923
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்
கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில்
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக.
20
1924
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு
நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக்
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள்.
21
1925
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க.
22
1926
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப.
23
1927
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற
மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல
அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக.
24
1928
தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.
25
1929
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்.
26
1930
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே
ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்.
27
1931
சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார்.
28
1932
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்
தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே.
29
1933
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்.
30
1934
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்.
31
1935
பயன் தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்.
32
1936
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்
சங்கம் படகம் கருவி தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்.
33
1937
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்
தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்.
34
1938
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்.
35
1939
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில்
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்.
36
1940
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி
உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்.
37
1941
செம் பொன் முதலான பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்.
38
1942
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும்
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார்.
39
1943
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
40
1944
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத்
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்.
41
1945
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்
அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத்
தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே
திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்.
42
1946
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்.
43
1947
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்
சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார்.
44
1948
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்
அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப்
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல்
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்.
45
1949
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார்.
46
1950
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்.
47
1951
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.
48
1952
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்.
49
1953
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்.
50
1954
தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்.
51
1955
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்.
52
1956
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும்.
53
1957
நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த
சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்.
54
1958
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய்.
55
1959
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்.
56
1960
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்.
57
1961
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல்
இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்
விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்.
58
1962
பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்.
59
1963
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார்
நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின்
ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்.
60
1964
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்.
61
1965
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்.
62
1966
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள.
63
1967
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான்
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச்
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்.
64
1968
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்.
65
1969
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன.
66
1970
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி.
67
1971
எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார்.
68
1972
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும்
தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்.
69
1973
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.
70
1974
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்.
71
1975
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா.
72
1976
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று
கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி.
73
1977
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல்
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்.
74
1978
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து.
75
1979
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்.
76
1980
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்.
77
1981
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.
78
1982
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
79
1983
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள
அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்.
80
1984
வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும்
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க.
81
1985
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம்
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப்
பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ.
82
1986
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால்
இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின்
புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி.
83
1987
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்.
84
1988
ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார்.
85
1989
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்
தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்.
86
1990
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ.
87
1991
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.
88
1992
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.
89
1993
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்.
90
1994
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து
ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன்
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார்.
91
1995
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப்
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்.
92
1996
புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும்
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்
பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.
93
1997
என்று இனைய பல கூறி இருக்கு
    மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண்
    மேல் ஏந்தி நிரந்த போது
சென்று அணைந்த தாதையர் சிவபாத
    இருதயர் தாம் தெய்வ ஞானக்
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல்
    கொண்டு களி கூர்ந்து செல்ல.
94
1998
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு
    திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில்
    எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத
    அதன் மீது பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல்
    விளங்கும் பெரும் காட்சித்தாக.
95
1999
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர்
    மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம்
    மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண்
    பொரியினொடும் தூவிநிற்பர்
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள்
    புடை பெயரும் கொள்கைத்தாக.
96
2000
மங்கல தூர் இயந்து வைப்பர்
    மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும்
    நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும்
    பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம்
    செய்து சாரும் காலை.
97
2001
தம் திரு மாளிகையின் கண் எழுந்து
    அருளிப் புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு
    ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன்
    அமர்ந்த துணைவி ஆகும்
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா
    மதுர மொழிப் பவள வாயார்.
98
2002
தூ மணி மாளிகையின் கண்
    அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத
மா மறைகள் திரண்ட பெரும் திருத்
    தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய
கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற
    இடையறாக் காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார்
    திருத் தோணி நம்பர் கோயில்.
99
2003
காதல் உடன் அணைந்து திருக்
    கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்க அரிய
    மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத்
    தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக்கா
    இறைஞ்ச விருப்பில் சென்றார்.
100
2004
பெருக் கோல் இட்டு அலை பிறங்கும்
    காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டு ஆட மாதரார்
    குடைந்து ஆடும் மணி நீர் வாவி
திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான்
    கோயில் வலம் செய்து முன் நின்று
இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம்
    ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.
101
2005
மெய்ந் நிறைந்த செம் பொருளாம்
    வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
    திங்கள் பரித்து அருளுவானை
மைந் நிறைந்த மிடற்றானை மடையில்
    வாளைகள் பாய என்னும் வாக்கால்
கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப்
    பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை.
102
2006
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும்
    கண்டு அருளி கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும்
    எழுதிய நல் செம்பொன் தாளம்
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு
    இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறைச்
    சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே.
103
2007
காழி வரும் பெரும் தகையார் கையில்
    வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு
    அருளி மனம் களிப்ப மதுர வாயில்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை
    வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக்
    கடைக் காப்புச் சாத்தி நின்றார்.
104
2008
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய
    நாதத்து அளவின் உண்மை நோக்கித்
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை
    உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை
    வாழ வந்து அருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச்
    சண்பை நகர் சாரச் செல்வார்.
105
2009
செங்கமல மலர்க் கரத்துத் திருத்
    தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது
    தோளின் மேல் தரித்துக் கொள்ள
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி
    அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத்
    தோணிச் சிகரக் கோயில்.
106
2010
திருப் பெருகு பெரும் கோயில் சூழ
    வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை
    ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார்
    தமைப் பாட மேவும் காதல்
பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து
    அருளினார் பூவார் கொன்றை.
107
2011
எடுத்த திருப் பதிகத்தின் இசை
    திருத் தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப்
    போந்து அலைநீர்ப் பொன்னி
மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ
    விளங் கோலத்துக் காட்சி
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை
    ஞானக் கொண்டலார் தாம்.
108
2012
அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்
    தமை முன்னம் அளித்த தாயார்
முன் உதிக்க முயன்ற தவத் திரு
    நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சி உடன்
    மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து
    கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்.
109
2013
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்
    களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு
    பிறப்பாளரும் அல்லா ஏனையோரும்
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக்
    குழாங் கொண்டு புகலியார் தம்
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல்
    பணியும் சிறப்பின் மிக்கார்.
110
2014
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு
    மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது
    முதல் ஆன சிறப்பின் செய்கை
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால்
    கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி
    எவ் உலகும் ஏத்தும் நாளில்.
111
2015
செழும் தரளப் பொன்னி சூழ் திரு
    நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள்
    பதியினில் கும்பிட்டு அருள அங்கே
எழுந்து அருள வேண்டும் என இசைந்து
    அருளித் தோணி வீற்று இருந்தார்
பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள்
    பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்.
112
2016
தாது அவிழ் செந்தாமரையின் அக
    இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும்
    பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத்
    தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து
    உடன் போந்தார் ஞானம் உண்டார்.
113
2017
தேன் அலரும் கொண்றையினார்
    திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்
வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது
    எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப்
பானல் வயல் திரு நன்னி பள்ளி
    எனத் தாதையர் பணிப்பக் கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல்
    தொடை மாலை நவிலல் உற்றார்.
114
2018
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச்
சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில்
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்.
115
2019
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.
116
2020
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.
117
2021
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி
பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்.
118
2022
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின்
தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்.
119
2023
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி
நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
120
2024
பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்.
121
2025
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்
தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை.
122
2026
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு
ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே.
123
2027
பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு
சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்.
124
2028
முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்
சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து
நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்.
125
2029
மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்
செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.
126
2030
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார்.
127
2031
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச்
சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.
128
2032
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.
129
2033
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள்
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி
உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்.
130
2034
திரு நீலகண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார்
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத்
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்.
131
2035
பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச்
சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்.
132
2036
அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு
கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்.
133
2037
கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்.
134
2038
தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்.
135
2039
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத்
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.
136
2040
எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப்
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின்
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப.
137
2041
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்.
138
2042
காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார்
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்.
139
2043
சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும்
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்.
140
2044
மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார்.
141
2045
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர்
பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.
142
2046
பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப
வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த
புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார்.
143
2047
தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்
மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த்
தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்.
144
2048
நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி
    நடுவு கண்டன போற்றி
முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை
    முகிழ் விரி மணம் சூழப்
புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு
    உடை கழிந்திடப் போந்து
கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார்
    கவுணியர் குல தீபர்.
145
2049
வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும்
    மணியும் ஆரமும் உந்தித்
தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல்
    தாழ்ந்து சேவடித்தாழ
தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும்
    செழு மணித் திரள் முத்தும்
கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர்
    கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.
146
2050
பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும்
    பயில் மறையவர் சூழச்
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி
    சிந்தை கூர் தரக் கண்டு
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும்
    வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர்
    ஞான ஆரமுது உண்டார்.
147
2051
செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி
    இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும்
    இரு மருங்கு எங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்து உரை எடுத்து
    முன் தாமரை மது வாசப்
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர்
    முகம் காட்டின புனல் பொய்கை.
148
2052
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக்
    கடி மணக் குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து
    உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர
    இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென்
    கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை.
149
2053
இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி
    இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய
    குருளையார் வரக் கண்டு
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர்
    வண்ண நுண் துகள் தூவித்
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின
    தடம் பணை வயல் சாலி.
150
2054
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர்
    எழுந்து அருளும் அந் நலம் கண்டு
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து
    அணை சீத மாருதம் வீசச்
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும்
    தன்மையில் களி கூர்வ
போல் அசைந்து இரு புடைமிடைந்து
    ஆடின புறம்பு அணை நறும் பூகம்.
151
2055
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில்
    மறையவர் பயில் வேள்விச்
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின்
    செழும் புகை பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார்
    தாம் அணைவுற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது
    போன்றது நெடுவானம்.
152
2056
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு
    கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம்
    என்று அணைத்தின் ஆகரம் ஆன
மருங்கில் நந்தன வனம் பணிந்து
    அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில்
    தென் திரு வாயில் நேர் அணித்தாக.
153
2057
பொங்கு கொங்கையில் கறந்த மெய்
    ஞானமாம் போனகம் பொன் குன்றம்
மங்கை செங்கையால் ஊட்ட உண்டு
    அருளிய மதலையார் வந்தார் என்று
அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை
    அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து
    எதிர் கொள அணைவார்கள்.
154
2058
வேத நாதமும் மங்கல முழக்கமும்
    விசும்பு இடை நிறைந்து ஓங்க
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள்
    திசை எலாம் நிறைந்து ஆரச்
சோதி மா மணி வாயிலின் புறம்
    சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்
கோதிலாதவர் ஞானசம்பந்தரை
    எதிர் கொண்டு புக்கார்.
155
2059
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில்
    தென் திசைத் திருவாயில்
எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு
    நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து
    போய் மறையவர் நிறை வாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத்
    தொழுது அணைந்தனர் தூயோர்.
156
2060
மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம்
    கமழ்ந்து வான் துகள் மாறிச்
சிலம்பு அலம்பு சேவடியவர் பயில்
    உறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ்
    திருவீதி கண் களி செய்யப்
பலன் கொள் மைந்தனார் எழுநிலைக்
    கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி.
157
2061
நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு
    நிலவிய திரு முன்றின்
மாடு செம் பொனின் மாளிகை வலம்
    கொண்டு வானுற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது
    போந்து அருமறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர்
    அணிகிளர் மணிவாயில்.
158
2062
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள்
    நலம் கொள்பவன் முறை கூட
அந்தம் இல்லவர் அணுகி முன்
    தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிடச்
    சென்னியில் சிறிய செங்கை யேற
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள
    உருகும் அன்பொடு புக்கார்.
159
2063
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்
    ஞானமே ஆன அம்பல முந்தம்
உள் நிறைந்த ஞானத்து எழும்
    ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு
    எழும் களிப்பொடும் கடல் காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர்
    போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு.
160
2064
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை
    ஒழிவு இன்றி உருவின் கண்
அணையும் ஐம் பொறி அளவினும்
    எளிவர அருளினை எனப் போற்றி
இணை இல் வண் பெருங் கருணையே
    ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர் ஆடினர்
    பொழிந்தனர் விழி மாரி.
161
2065
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி.
162
2066
பண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும்
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்.
163
2067
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று
சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்.
164
2068
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்.
165
2069
செய்ய சடையார் திருவேட்களம் சென்று
கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன்
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும்
ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள்.
166
2070
கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து
மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார்.
167
2071
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்.
168
2072
ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து
பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண்.
169
2073
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக்
கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்.
170
2074
செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும்
எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்.
171
2075
பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம்
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்
செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார்.
172
2076
ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்
குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ்.
173
2077
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
    என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில்
    பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான் மறையோர்
    தமைக் கண்ட அந் நிலை எல்லாம்
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச்
    சிற்றம் பலம் எனக் கூறி.
174
2078
இன்ன தன்மையில் இன் இசைப்
    பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து
    எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள்
    பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து
    போந்து அணைந்தனர் புறமுன்றில்.
175
2079
அப் புறத்து இடை வணங்கி அங்கு
    அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்புறத் தொழுது எழுந்து உடன்
    போதரப் போற்றிய புகழ்ப் பாணர்
நற்பதம் தொழுது அடியனேன் பதி
    முதல் நதி நிவாக்கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும்
    என்று உரை செய அது நேர்வார்.
176
2080
பொங்கு தெண்திரைப் புனித நீர்
    நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும்
    தவ முனிவரும் செல்லச்
செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப்
    பெரும் பாணருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளா
    மணியாருடன் வரவந்தார்.
177
2081
இரும் தடங்களும் பழனமும் கடந்து
    போய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீல கண்டப்
    பெரும்பாணர் வணங்கிக் கார்
நெருங்கு சோலை சூழ் இப்பதி
    அடியேன்பதி என நெடிது இன்புற்று
அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார்
    அங்கணைந்து அருள் செய்வார்.
178
2082
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி
    அளவில் மாதவம் முன்பு
செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி
    அச் செழும்பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு
    வலம் கொண்டு வணங்கி பார்
உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம்
    அங்கு இசையுடன் உரை செய்தார்.
179
2083
அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன்
    அம்பொன்மா மலை வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நற்பதி பல
    பரிவொடும் பணிந்து ஏத்தித்
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப்
    போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்
செங்கண் ஏற்றவர் திருமுது குன்றினைத்
    தொழுது சென்று அணைகின்றார்.
180
2084
மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு
    சூழ்முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை
    இசையொடும் புனைந்து ஏத்தி
செய் தவத்திரு முனிவரும் தேவரும்
    திசையெலாம் நெருங்கப் புக்கு
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில்
    ஆதரவுடன் சென்றார்.
181
2085
வான நாயகர் திருமுது குன்றினை
    வழிபட வலம் கொள்வார்
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள்
    துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞான போதகர் நம்பர் தம் கோயிலை
    நண்ணி அங்கு உள்புக்கு
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி
    திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.
182
2086
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து
    எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன்
    இடை வைகுவார் மணி வெற்புச்
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு
    தொடுத்த சொல் தொடை மாலை
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே
    மேவினார் சில நாள்கள்.
183
2087
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம்
    அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற
    ஒரு தனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு
    பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும்
    இசைப் பதிகமும் தெரிவித்தார்.
184
2088
கருவரைப்பில் புகாதவர் கை தொழும்
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன்
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்.
185
2089
முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந்தணாளர் அவர் அருகே செலச்
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.
186
2090
ஆதியார் தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
187
2091
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்.
188
2092
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர்
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.
189
2093
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத்
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.
190
2094
மாறன் பாடி எனும் பதி வந்துற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார்
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட.
191
2095
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்.
192
2096
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மாதவத்தோருடன் மேவினார்.
193
2097
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்
மன்னனார் தம் வழி வருத்தத் தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர்.
194
2098
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
195
2099
நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின்
மாட மாமணை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குல் கனவில் குலமறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.
196
2100
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முகத்தின் சிவிகை மணிக் குடை
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக்
கோன் அவன் பால் அணைந்து கொடும் என.
197
2101
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்.
198
2102
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்.
199
2103
சால மிக்க வியப்புறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படும்
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
200
2104
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்
துங்க வெண் குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்.
201
2105
கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
202
2106
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்.
203
2107
மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர்
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர்
தேசுடைச் சிவிகை முதலாயின
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்.
204
2108
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா
முத்த நற் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்.
205
2109
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.
206
2110
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.
207
2111
மாலை யாமம் புலர் உறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்.
208
2112
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.
209
2113
ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.
210
2114
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன்
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்.
211
2115
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று உளரர் அருள் என்று வணங்கினார்.
212
2116
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே.
213
2117
எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார்.
214
2118
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம் அருளே இதுவாம் எனப்
படி இலாத சொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
215
2119
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்.
216
2120
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம்.
217
2121
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே.
218
2122
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார்
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம்
மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார்.
219
2123
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்.
220
2124
செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத.
221
2125
சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம்
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட
பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க.
222
2126
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத.
223
2127
தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம்
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு
அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார்.
224
2128
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்.
225
2129
மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்
பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்.
226
2130
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி
நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப்
பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில.
227
2131
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள்
அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார்.
228
2132
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக்
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.
229
2133
விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த
களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட
உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்.
230
2134
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே
வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்.
231
2135
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப்
கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக்
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப்
புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்.
232
2136
மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்.
233
2137
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர்
புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.
234
2138
அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.
235
2139
அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர்
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
236
2140
மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.
237
2141
பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெரும் திரு விசய மங்கையில்.
238
2142
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
239
2143
விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்
அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்.
240
2144
புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிகச் செம்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்.
241
2145
அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்
கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு
முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார்
செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்.
242
2146
திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர்
அரு மறையவர் பதி அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே
வருமுறை எதிர் கொள வந்து முந்தினார்.
243
2147
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி என்று நித்தில
யானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்.
244
2148
மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார்
தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர்
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்.
245
2149
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார்.
246
2150
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு
செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
247
2151
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்
பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்.
248
2152
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதி உளோர் நயக்க வைகிய
பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.
249
2153
ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப்
பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த்
தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்.
250
2154
மற்ற நல் பதி வட தளியின் மேவிய
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்
சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர்.
251
2155
சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
252
2156
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
253
2157
அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர்
பைப் பணியவர் கருப் பறியல் ஊரினில்.
254
2158
பரமர் தம் திருக் கருப் பறியல் ஊரினைச்
சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.
255
2159
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள
    வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப
    இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி
    கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும்
    திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது.
256
2160
பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப்
    பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும்
    உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும் மிடை
    மகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும்
    கொடிகள் நிரைத்து எதிர் கொள் சிறப்பில் செய்வார்.
257
2161
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க
    அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது
    மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வாரணங்கு முலை உமையாள் குழைத்த
    செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது
    செழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார்.
258
2162
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு
    கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
    சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
    இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று
    வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்.
259
2163
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி
    சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர்
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு
    மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து
துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி
    புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று
    தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
260
2164
பரவு திருப்பதிக இசை பாடி நீடும்
    பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி
    விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
    திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில் போக
    அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்.
261
2165
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்
    மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள
    நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று
    ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில்
    புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்.
262
2166
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து
    நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம்
    மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில்
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு
    இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத்
    தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
263
2167
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை
    உலகு இயல்பின் உபநயன முறைமையாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
    எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று
    மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார்
    எண்ணிறந்த புனித வேதம்.
264
2168
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல்
    கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி
    அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலை
    மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம்
    முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்.
265
2169
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து
    மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு
    மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
    முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று
    அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார்.
266
2170
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
    அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
    திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
    விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்
    தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்.
267
2171
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக
அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர்.
268
2172
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டு
பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெரும் தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்.
269
2173
சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய.
270
2174
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்.
271
2175
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்.
272
2176
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப்
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்.
273
2177
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.
274
2178
வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத்
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.
275
2179
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச்
சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு.
276
2180
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர்.
277
2181
இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.
278
2182
அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ் மாலை பாடி இங்கு எய்துவன் என்று
தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.
279
2183
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்.
280
2184
ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்.
281
2185
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரத்த
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற.
282
2186
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க.
283
2187
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்.
284
2188
திருமறைச் சபையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார்.
285
2189
போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர்
நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்.
286
2190
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார்.
287
2191
அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.
288
2192
திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்
பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார்.
289
2193
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணம் சேரி
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்.
290
2194
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார்.
291
2195
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்.
292
2196
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்.
293
2197
வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார்.
294
2198
திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்.
295
2199
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்
மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
296
2200
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கான
பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி
பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்.
297
2201
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார்.
298
2202
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்
உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்
அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.
299
2203
மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி.
300
2204
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு
    வர மான் ஏந்து கையர் தம்பால்
நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை
    முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து
    அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை
    போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.
301
2205
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு
    அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி
    உள் எய்தி அளவில் காதல்
தணியாத கருத்தின் ஓடும் தம்பெருமான்
    கோயில் வலம் கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து
    எழுந்து அன்பால் பரவுகின்றார்.
302
2206
கோடல் கோங்கம் குளி கூவிளம்
    என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த
    திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று
    எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
    கண் பொழி நீர் பரந்து பாய.
303
2207
பல முறையும் பணிந்து எழுந்து புறம்
    போந்து பரவு திருத் தொண்டரோடு
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும்
    நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர்
    முதலான அணைந்து போற்றிக்
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு
    அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்.
304
2208
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு
    அங்கு அருள் பெற்றுக் குறிப்பின் ஓடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர்
    திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ்
    மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு பூகம்
    இடை மழபாடி போற்றச் சென்றார்.
305
2209
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்
    புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம்
    எடுத்து அருளி அணைந்த போழ்தில்
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி
    தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மாதவம் உடையார் எனத் தொழுது
    போற்றி இசைத்தே கோயில் புக்கார்.
306
2210
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து
    மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச்
    சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத்
    தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு
    அங்கு உறைந்தார் சின்னாள்.
307
2211
அதன் மருங்கு கடந்து அருளால்
    திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பிலாந் துறையின்
    முன்னவனைத் தொழுது போற்றிப்
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார்
    பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை
    மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்.
308
2212
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து
    உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை
    வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள்
    தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில்
    சொல் மாலை நிகழப் பாடி.
309
2213
அங்கண் அகன்று அம் மருங்கில்
    அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து
போற்றிச் செங்கமலப் பொதி அவிழச் சேல்
    பாயும் வயல் மதுவால் சேறு மாறாப்
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட
    கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம்
    பணிய நண்ணும் போதில்.
310
2214
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த
    அரும் பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மடப்பிணையாம் காமரு
    கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன்
    வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித்
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத்
    தானும் மனம் தளர்வு கொள்வான்.
311
2215
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை
    மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான்
    ஆதலினால் பரிவு தீரப்
பொன் தொடியைக் கொடு வந்து போர்
    கோலச் சேவகராய் புரங்கள் மூன்றும்
செற்றவர் தம் கோயில் உட் கொடு புகுந்து
    திரு முன்பே இட்டு வைத்தான்.
312
2216
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
    எழுந்து அருளி அணுக எய்தச்
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான
    சம்பந்தன் வந்தான் என்றே
எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும்
    தனிக் காளத்து எழுந்த ஓசை
எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்
    இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான்.
313
2217
மா நகரம் அலங்கரிமின் மகர
    தோரணம் நாட்டும் மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி மணி
    விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக
    இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு
    தொழுது அணைந்தான் மழவர் கோமான்.
314
2218
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன்
    என்று ஆனந்தம் பெருகு காதல்
வெள்ளம் நீர் கண் பொழியத் திருமுத்தின்
    சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த
    திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின்
    மணிவீதி கொண்டு புக்கான்.
315
2219
மங்க தூரியம் முழங்கும் மணி வீதி
    கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து
    ஆக புனை முத்தின் சிவிகை நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து
    அருளி அணிவாயில் பணிந்து புக்கு
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு
    திருமுன் வணங்கச் சாரும் காலை.
316
2220
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து
    நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
என் இது என்று அருள் செய்ய மழவன்தான்
    எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகனாம் பொருவில்
    அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது
    புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்.
317
2221
அணிகிளர் தார் அவன் சொன்ன மாற்றம்
    அருளொடும் கேட்டு அந் நிலையின் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய
    பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட
    மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத்
    தண்தமிழ் பாடினார் சண்பை நாதர்.
318
2222
பன்னு தமிழ் மறையாம் பதிகம்
    பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க
    மழவன் பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்கக்
    கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து
    பெருவலித் தாதை புடை அணைந்தாள்.
319
2223
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
    மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கக்
தன்தனிப் பாவையும் தானும் கூடச்
    சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்
    அணிவேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர்
    பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.
320
2224
நீடு திரு வாச்சிரமம் மன்னும் நேரிழை
    பாகத்தர் தாள் வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும்
    கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து
    பணிந்து அடிபோற்றி ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
    சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
321
2225
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப்
    பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி
    வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ்
    சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம்
    திரு ஈகோய் மலையைச் சார்ந்தார்.
322
2226
செங்கண் குறவரைத் தேவர் போற்றும்
    திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த
    இசைப் பதிகம் புனைந்து பொங்கர்ப்
பொழில் சூழ் மலையும் மற்றும்
    புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்
    கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார்.
323
2227
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாடச் செங்குன்றூர்.
324
2228
அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில்.
325
2229
தம் பெருமான் கோயிலினுள் எழுந்து அருளித் தமிழ் விரகர்
நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக்
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.
326
2230
அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப்
பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்.
327
2231
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப்
பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால்.
328
2232
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப்
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத்
துளித் தலைமேல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால்
குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்.
329
2233
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க்
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.
330
2234
நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன.
331
2235
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.
332
2236
அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்.
333
2237
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்று
சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்.
334
2238
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே
செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்.
335
2239
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து
தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய
மேய அப்பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்
தீய பனிப் பிணி அந்நாட்டு அடங்கவும் தீர்ந்தது அன்றே.
336
2240
அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று
துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி
முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.
337
2241
பருவம் அருப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம்
மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம்
பெருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
338
2242
செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி
நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து
மல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்.
339
2243
பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்
அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார்.
340
2244
நீடும் பராயத் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலை
பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச்
சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.
341
2245
தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா
வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்.
342
2246
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக்
    கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த
    போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான
    சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றமிழ் மூக்கீச்சரம் பணிந்து
    திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்.
343
2247
செம்மணி வாரி அருவி தூங்கும்
    சிராப் பள்ளி மேய செழும் சுடரை
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண்
    நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய
    சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை
    வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.
344
2248
விண்ணவர் போற்றி செய் ஆனைக்
    காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து
    நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
    அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி
    நின்று ஏத்தினர் பான்மையினால்.
345
2249
நாரணன் நான்முகன் காணா உண்மை
    வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
    திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
    ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
    ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்.
346
2250
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து
    காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார்
    மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்
    தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள
    தானம் வழுத்திச் செல்வார்.
347
2251
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும்
    எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி
    விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம்
    எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள
    மா நகர் சென்று சேர்ந்தார்.
348
2252
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால்
    நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும்
    இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
    அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த
    காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார்.
349
2253
சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச்
    செம்சடை நம்பர் தம் கோயில் எய்தி
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து
    மொய் கழல் சேவடி கை தொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக்
    கண் நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு
    மன்னும் முலை பாடி வாழ்ந்தார்.
350
2254
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி
    அணிந்திரு வாலம் பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி
    பொய் இலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம்
    எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக்
    கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்.
351
2255
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக்
    கலந்து அடியாருடன் காதல் பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக்
    குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று
    தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்
அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம்
    அடியார் பெருமையில் கேட்டு அருளி.
352
2256
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு
    திருக்கடைக் காப்பு தன்னில்
அனைய நினைவு அரியேன் செயலை
    அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து
    போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்
    சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.
353
2257
அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று
ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்.
354
2258
தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை
செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி
எல்லையில் அன்பு கூர இறைஞ்சினார்.
355
2259
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்.
356
2260
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.
357
2261
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
358
2262
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாண் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார்.
359
2263
பாடி நின்று பரவிப் பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர்.
360
2264
மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய்
மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்
பெய்தவம் அருளினார் இயல் இசைத் தலைவனார்.
361
2265
சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து
அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்.
362
2266
தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று
அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப்
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
363
2267
மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம்
பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து
இன் இசைத் தமிழ் புனைந்து இறைவர் சேல் ஊருடன்
பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார்.
364
2268
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்
பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
365
2269
மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப்
பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச்
சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்.
366
2270
நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும்
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே
அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்.
367
2271
வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர்
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்.
368
2272
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான்
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து
அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால்
விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார்.
369
2273
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி
நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார்.
370
2274
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்.
371
2275
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்.
372
2276
பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர்.
373
2277
மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்.
374
2278
பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழுவு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து.
375
2279
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து
பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்.
376
2280
பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.
377
2281
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில் திரு வலம் சுழியில் வந்து அணைந்தார்.
378
2282
மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக்
கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்.
379
2283
கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணிய தலைவர்
அலர்ந்த செம் கமலக் கரம் குவித்து உடன் அணைவார்
வலம் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.
380
2284
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்
திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.
381
2285
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர் தமை வினவும்
ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி.
382
2286
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து
நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலம் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார்.
383
2287
மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாள் இடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்.
384
2288
தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப.
385
2289
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான்
பெறல் அரிய புனல் என்று பேத்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும்
பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்.
386
2290
நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும்
வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால்.
387
2291
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரிய
குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத்
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்.
388
2292
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலம் சுழியை
எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்.
389
2293
திருவாறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்.
390
2294
திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்
கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி
விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்.
391
2295
வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப.
392
2296
அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.
393
2297
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார்
மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப்
புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்.
394
2298
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார்
வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்.
395
2299
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்.
396
2300
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்.
397
2301
அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரய ஆனந்தப்
பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெருங்காதல்
திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்.
398
2302
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்
செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்.
399
2303
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக்
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார்.
400
2304
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று
பண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்.
401
2305
நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.
402
2306
பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில்
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.
403
2307
அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்.
404
2308
போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு
நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்.
405
2309
தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத்
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்.
406
2310
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்.
407
2311
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளை
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.
408
2312
பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.
409
2313
கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப்
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி.
410
2314
திரு நாகேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றை
கரு நாகத்து உரி புணைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் புற்றார்.
411
2315
மா நாகம் அர்ச்சித்த மலர் கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய் புகுகின்றார்.
412
2316
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித்
தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார்.
413
2317
அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து
முடிவில் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப்
படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய.
414
2318
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் பதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்.
415
2319
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க்
குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருக
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து.
416
2320
அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு
கைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி
நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச்
செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்.
417
2321
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்
தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக்
காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவு உடன் கலந்தார்.
418
2322
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை
அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்.
419
2323
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான்
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார்.
420
2324
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்.
421
2325
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்.
422
2326
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி
அந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள்
எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்.
423
2327
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன்
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
424
2328
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.
425
2329
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்
அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து
உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று.
426
2330
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திரு அருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார்.
427
2331
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து
அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள்
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அத் தாதையார்க்கு அளித்து உரைசெய்வார்.
428
2332
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.
429
2333
என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண
வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.
430
2334
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்
தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்.
431
2335
கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.
432
2336
வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி
செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தர் ஆய்த்திரு நல்லத்தில் நண்ணி.
433
2337
நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்
பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்
அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்.
434
2338
மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப்
பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து
சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்.
435
2339
திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்
கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்.
436
2340
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து
பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்.
437
2341
மல்கு தண் தலை மயிலாடு துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்.
438
2342
உள்ளம் இன்புற உணர் உறும் பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்.
439
2343
அத்திருப்பதி அன்று போய் அணிகிளர் சூலங்
கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம்
பத்தர் தம் உடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார்.
440
2344
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்.
441
2345
பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச்
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார்.
442
2346
அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி
    பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக்
கடி கமழும் மலர் பழனக் கழிநாடு அகன்
    பதிகள் கலந்து நீங்கிக்
கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார்
    குண்டர் சாக்கியர் தம் கொள்கை
படி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும்
    நெறி காட்டும் பவள வாயர்.
443
2347
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
    பிறப்பு இடம் ஆம் அதனால் சார
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர்
    கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு
    உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால்
    பயிற்றும் பேறு அருளிச் செய்தார்.
444
2348
கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு
    திரு பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து
    இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது என விளம்புதலும்
    வளம் புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப்
    பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
445
2349
அலகில் திருப்பதிக இசை அளவு படா
    வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உளோரும் தெரிந்து அங்கு
    உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும்
பண்பால் பலர் புகழும் திருப்பதிகம்
    பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான்
    காட்டப் பெறுவன் என்றார்.
446
2350
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன்
    தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும்
    நிலத்த நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத
    வகை காட்ட நாட்டுகின்றார்
மாதர் மடப்பிடி பாடி வணங்கினார்
    வானவரும் வணங்கி ஏத்த.
447
2351
வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி
    எடுத்து வனப்பில் பாடிப்
பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த
    அணைந்து பெரும் பாணர் தாம்
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு
    போல் கைக்கொண்டு நடத்தப்புக்கு
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில்
    இட அடங்கிற்று இல்லை அன்றே.
448
2352
அப்பொழுது திருநீல கண்ட இசைப்
    பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார்
    கழல் இணை வீழ்ந்து நோக்கி
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து
    இசை யாழில் ஏற்பன் என்னச்
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின்
    நன்றோ என்று தெளிந்து செய்வார்.
449
2353
வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது
    இது என்று அங்கு அதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற
    இசை அளவினால் நீர்
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என
    வாங்கிக் கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர்
    பணித்து அருளுகின்றார்.
450
2354
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென்
    ஆள் உடையாள் உடனே கூடச்
செய்ய சடையார் அளித்த திருவருளின்
    பெருமை எலாம் தெரிய நம்பால்
எய்திய இக் கருவியினில் அளவு படுமோ
    நம் தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின்
    இயற்றல் வழக்கே என்றார்.
451
2355
சிந்தையால் அளவு படா இசைப் பெருமை
    செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினைக் கொண்டே இறைவர்
    திருப் பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக்
    கொடுப்பப் புகலி மன்னர் தந்த
யாழினைத் தொழுது கைக் கொண்டு
    பெரும் பாணர் தலை மேல் கொண்டார்.
452
2356
அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும்
    பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம்
துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத்
    தோணிபுரத் தோன்றலாரும்
இணையில் பெரும் சிறப்பு அருளித்
    தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப்
பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம்
    பதி பிறவும் பணியச் செல்வார்.
453
2357
பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு
    அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில்
    எனைப் பலவும் வணங்கிப் போற்றித்
தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன்
    மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார்
    அமர்ந்து அருளும் திரு நள்ளாறு.
454
2358
நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர்
    திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி
    உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர் தம் திருவளர்
    கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு
    தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்.
455
2359
உருகிய அன்புறு காதல் உள் உருகி
    நனை ஈரம் பெற்றால் போல
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த
    மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த
    வெள்ளம் இழிந்து அலைய நின்று
பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண்
    முலையாள் என்று எடுத்துப் போற்றி.
456
2360
யாழ்நரம்பில் ஆர இயல் இசை
    கூடப் பாடியே எண்ணில் கற்பச்
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக்
    காப்பு சாத்திச் செங்கண் நாகப்
பூண் அகலத்தவர் பாதம் போற்றி
    இசைத்துப் புறத்து அணைந்து புவனம்
ஏத்தும் பாணனார் யாழில் இடப் பால்
    அறா வாயர் அருள் பணித்த போது.
457
2361
பிள்ளையார் திருத்தாளம் கொடு
    பாடப் பின்பு பெரும் பாணனார் தாம்
தெள் அமுத இன் இசையின் தேம்
    பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக்
கொள்ள இடும் பொழுதின் கண்
    குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து
    திருத் தொண்டர் உடன் மருவும் காலை.
458
2362
மன்னு திரு நள்ளாற்று மருந்தை
    வணங்கிப் போந்து வாச நன்னீர்ப்
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு
    அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந் நெல் வயல் செங்கமல முகம்
    மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்
தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா
    மணியார் மெய்த் தவத்தோர் சூழ.
459
2363
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில்
    நீல நக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு
    வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு
    நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன்
    அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்.
460
2364
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம்
    கோயில் மருங்கு அணைந்து வானோர்
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம்
    கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து
    மாதவம் இவ் வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செங்கைமேல்
    குவித்து எழுந்து திருமுன் நின்றார்.
461
2365
போற்றி இசைக்கும் பாடலினால்
    பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று
    துதித்துப் போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீல நக்கர்
    மனையில் எழுந்து அருளி அன்பால்
ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன்
    இன்புற்று அங்கு அமுது செய்தார்.
462
2366
நீடு திரு நீல நக்கர் நெடு மனையில்
    விருந்து அமுது செய்து நீர்மைப்
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க
    அங்கு இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு
    அன்பருடன் அணைந்து சென்று
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன்
    நாதர் கழலில் தாழ்ந்து.
463
2367
கோது இலா ஆர் அமுதைக் கோமளக்
    கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறைப் பொருளால் அரு தமிழின்
    திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம்
    பெரும் சீர் நிகழ வைத்துப்
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப்
    பதிகம் போற்றி செய்தார்.
464
2368
பரவிய காதலில் பணிந்து பால் அறா
    வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு
    உறு காதலில் தங்கி மேவும் நாளில்
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும்
    ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம்
    உடையவர்க்கு விடை உவந்து நல்கி.
465
2369
மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு
    மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
    பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக்
    கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித்
    தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம்.
466
2370
கழிக் கானல் மருங்கு அணையும் கடல்
    நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும்
    பரவிப் போய்த் தோகைமார் தம்
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர்
    விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி
    அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.
467
2371
அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம்
    அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து
    அருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும்
    சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு
குருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு
    தம் பதியுள் கொண்டு புக்கார்.
468
2372
சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங்
    குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்
    அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச்
    சரத்தின் கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த்
    தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்.
469
2373
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு
    அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு
    பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர்
    தொழ இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து
    அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்.
470
2374
போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின்
    திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து
    அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம்
    கணபதீச் சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு
    அன்பருடன் இருந்த நாளில்.
471
2375
திருமருகல் நகரின் கண் எழுந்து
    அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு
மருவு நெடும் சடைமவுலி மாணிக்க
    வண்ணார் கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்புறு காதல் உள் அலைப்பத்
    தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார்
    பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.
472
2376
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி
    அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு
பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு
    புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மினார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த
    விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல்
    இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வான்.
473
2377
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்
    மறு மாற்றம் மற்று ஒருவர் கொடு பார் இன்றி
ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே
    அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக்
    கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள்
    நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்.
474
2378
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
    அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன்
    இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன்
    என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில்
    திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்.
475
2379
அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய
    அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
    நீலவிட அரவு அணிந்த நிமலா வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப்
    புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும்
    கவின் மருகற் பெருமானே காவாய் என்றும்.
476
2380
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர்
    மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம்
    சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான்
    இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும்
அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி
    அணி மருகற் பெருமானே அருளாய் என்றும்.
477
2381
இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்
    இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை
    ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்
மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார
    மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்
வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா
    தவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார்.
478
2382
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
    சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ
    பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக்
கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
    கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள்
    போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்.
479
2383
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன்
    எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள்
    இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக்
குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
    ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் தளர்ந்து
அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு
    அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன்.
480
2384
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்
    மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல்நின்றேன்
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம்
    எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர்
    கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகர்
    பெருமானைப் பாடலுற்றார்.
481
2385
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை
    சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
    விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு
    அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
    ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட.
482
2386
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த
    பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
    அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த
நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு
    நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர்
    மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
483
2387
மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும்
    நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம்
சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
    செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று
    பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச்
    சுடர்மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்.
484
2388
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
    பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
    திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு
    நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி
    கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.
485
2389
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம்
    மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்சரத்தார்
    பீடு உடைக்கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
    உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார் உறப் பாடலுற்றார்
    அங்கமும் வேதமும் என்று எடுத்து.
486
2390
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக்
    கணபதி ஈச்சரம் காதலித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
    அப்பதியில் சில நாள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத்
    தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்
புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம்
    புகலூர் தொழப் போதுகின்றார்.
487
2391
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்
    தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும்
    விடை அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
    நிகழும் பதிகன் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்
    புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.
488
2392
திருப்புகலூர் திருத் தொண்டரோடும்
    செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து
    வேத முதல்வர் தம் கோயில் எய்திப்
பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து
    பூமலி முன்றில் புடை வலம் கொண்டு
ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார்
    ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்.
489
2393
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து
    பூம் புகலூர் மன்னு புண்ணியரை
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க
    நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி
    மேவிய ஏழ் இசை பாடிப் போந்து
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல
    அவர் மடம் சென்று புக்கார்.
490
2394
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி
    அப் பதி தன்னில் அமரு நாளில்
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த
    வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார் தம்
    உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும்
    பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்.
491
2395
மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின்
    பெரு விறல் மன்னனார் தாம்
புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப்
    பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிறு இடைப் பொன் தொடிப் பாங்கர்
    தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர்
    குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
492
2396
நாவுக்கு அரசர் எழுந்து அருளும்
    நல்ல திருவார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான
    சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர்
    கொள்ள மெய் அன்பர் ஓடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு
    அணை எல்லை கடந்து போந்தார்.
493
2397
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
    அரசும் எதிர் வந்து அணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர்
    சிங்கமும் பொற்பின் எய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
    தாழ்ந்து வணங்கித் தனித் தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை
    வினவி மகிழும் போது.
494
2398
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின்
    வேந்தரை விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர்
    அருள் உடையோம் அந்தனர் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது
    என்று வினவிட ஈறில் பெரும்
தவத்தோர் செப்பிய வண் தமிழ் மாலையாலே
    திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்.
495
2399
அரசர் அருளிச் செய்த வாய்மை
    அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின் கண்
    தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும்
    வந்து உம்முடன் மேவுவன் என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து
    உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.
496
2400
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர்
    தோன்றல் பின் காதல் தொடத் தாமும்
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார்
    புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி
    விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும்
    பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார்.
497
2401
துணர் இணர்ச் சோலையும் சாலி
    வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார்
    மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர்
    அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப்
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
    பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்.
498
2402
வான் உயர் செங்கதிர் மண்டலத்து
    மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும்
    தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானைப்
    பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்
தேனொடு வண்டுமுரலும் சோலைத்
    திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்.
499
2403
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
    பொழிந்து புவிமேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின்
    இலங்கு சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறை மலர் கொண்டு தூவித்
    திரு இருக் குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்
    தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்.
500
2404
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு
அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.
501
2405
நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன்
தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை
யான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலைய
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி.
502
2406
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.
503
2407
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்
நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர்.
504
2408
தழை மலர்த்தடம் சாலைகள் தெற்கள் சதுக்கம்
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்.
505
2409
விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும்
பிரசமென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது.
506
2410
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்.
507
2411
ஆன அத்திரு பதிகம் முன் பாடிவந்து அணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார்
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்.
508
2412
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்
தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்.
509
2413
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக்
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத்
தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார்.
510
2414
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்.
511
2415
செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து
அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்.
512
2416
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த
செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்
பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப்
பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்.
513
2417
புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக
பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி
நல்தவத் திருத்தொண்டர்கள் ஒடு நலம் சிறப்ப
மற்ற வண்பதி தன் இடை வைகும் அந் நாளில்.
514
2418
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத்
தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே
எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.
515
2419
ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து
நீறு வாழ் என நிகழ் திருத் தொண்டர் களோடும்
ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்.
516
2420
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல
நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார்.
517
2421
புவன ஆரூரினில் புறம் போந்து
    அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ
    உய்யும் ஆறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது
    என்று செங்கை கூப்பி
பவனமாய்ச் சோடையாய் எனும்
    திருப்பதிகம் முன் பாடினாரே.
518
2422
காழியார் வாழ வந்து அருள் செயும்
    கவுணியப் பிள்ளையார் தாம்
ஆழியான் அறிஒணா அண்ணல்
    ஆரூர் பணிந்து அரிது செல்வார்
பாழி மால் யானையின் உரி
    புணைந்தார் பனையூர் பணிந்து
வாழி மாமறை இசைப் பதிகமும்
    பாடி அப் பதியினில் வைகி.
519
2423
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார்
    அகில காரணமும் ஆனார்
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து
    அருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத்
    தொழுது எழுந்து அருளி வந்தார்
பொங்கு தண் பாசடைப் பங்கயப்
    புனல் வயல் புகலூர் சார.
520
2424
நாவினுக்கு அரசரும் நம்பி சீர்
    முருகரும் மற்று நாமச்
சேவுகைத்தவர் திருத் தொண்டர்
    ஆனவர்கள் முன் சென்று சீதப்
பூவினில் பொலி புனல் புகலியார்
    போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே
    விமலர் கோயிலை அடைந்தார்.
521
2425
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு
    அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன்
    பரவுவார் புறம்பு அணைந்தே
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி
    அத் தனி முதல் தொண்டர் தாமே
யாவையும் குறை அறுத்து இட அமர்ந்து
    அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்.
522
2426
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும்
    உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீலம் மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும்
    செய்கை நேர் நின்று வாய்மை
சாலமிக்கு உயர் திருத் தொண்டின்
    உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக்
    கலந்து அருளினார் காழி நாடார்.
523
2427
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து
    இசை எனும் பதிக முன் ஆன பாடல்
தம் பெரும் தலைமையால் நிலைமை சால்
    பதிய தன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல்
    பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும்
    முன் நண்ணியே தொழ நயந்தார்.
524
2428
புள்ளல் அம்பு தண்புனல் புகலூர்
    உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு
    அரசரும் பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல
    நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு
    ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
525
2429
கண்ணகன் புகல் ஊரினைத் தொழுது
    போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம்
    அருகு விட்டு அகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர
    வழிகொள உறும் காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு அரசரும்
    மற்று அவர்க்கு இசைக்கின்றார்.
526
2430
நாயனார் உமக்கு அளித்து அருள்
    செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர்
    என்றலும் சுடர்த் திங்கள் மேய
வேணியர் அருளும் இவ்வாறு எனில்
    விரும்பு தொண்டர்களோடும்
போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப்
    போவது என் அருள் செய்தார்.
527
2431
என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட
    இரும் தவத்து இறையோரும்
நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று
    அருள் செய்து நயப்பு உற்ற
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள்
    எலாம் அவ் இயல்பினில் செல்வார்
சென்று முன் உறத் திருவம்பர் அணைந்தனர்
    செய்தவக் குழாத்தோடும்.
528
2432
சண்பை மன்னரும் தம்பிரான் அருள்
    வழி நிற்பது தலைச் செல்வார்
பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச்
    சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரும் புகல் ஊரினைக் கடந்து
    போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு
    என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்.
529
2433
அம்பர்மா நகர் அணைந்து மாகாளத்தில்
    அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு
    திருமுன்பு பணிந்து ஏத்தி
வம்புலாம் மலர் தூவி முன் பரவியே
    வண்தமிழ் இசை மாலை
உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து
    உருகும் அன்பொடு தாழ்ந்தார்.
530
2434
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன்
    தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி
    அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள்
    விரும்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ
    வந்து அருளிய மறை வேந்தர்.
531
2435
பொருவு இலாத சொல் புல்கு பொன்
    நிறம் முதல் பதிகங்களால் போற்றித்
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான்
    அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ்
    மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலில் பணிந்து முன்
    பரவினார் பேணிய உணர்வோடும்.
532
2436
இன்ன வாறு சொல் மாலைகளால்
    துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழக்
    காதல் செய்து அருளிப்போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே
    வாக்கின் மன்னவ ரோடும்
அந்நெடும்பதி அணைவுறக் கயலரோடு
    அடியவர் எதிர்கொண்டார்.
533
2437
மற்ற வண் பதி அணைந்து வீர
    அட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை
    உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன்
    போற்றி உய்ந்து எதிர் நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான்
    எனும் பதிக இன் இசை பாடி.
534
2438
பரவி ஏத்தி அங்கு அரிதினில்
    போந்து பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலிய பெருங்
    கலயர் தம் மனை மேவிக்
கரை இல் காதல் மற்று அவர் அமைத்து
    அருளிய விருந்து இனிது அமர்ந்து
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து
    இருந்தனர் சிறப்பு எய்தி.
535
2439
சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச்
    சில நாள் அமர்ந்து அருளோடும்
விறல் பெரும் கரி உரித்தவர்
    கோயில்கள் தொழச் செல்வார்
மறைப் பெரும் திருக் கலயரும்
    உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு
    அணைந்தனர் திருவாக்கூர்.
536
2440
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில்
    தான் தோன்றி மாடத்துச்
செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து
    இசைச் செந்தமிழ் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது
    போய் மீச்சூர் பணிந்து ஏத்திப்
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார்
    பாம்புரம் நகர் சேர்ந்தார்.
537
2441
பாம்புரத் துறை பரமரைப் பணிந்து
    நல் பதிக இன் இசை பாடி
வாம்புனல் சடை முடியினார் மகிழ்
    இடம் மற்றும் உள்ளன போற்றிக்
காம்பினில் திகழ் கரும்பொடு செம்
    நெலின் கழனி அம்பணை நீங்கித்
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின்
    மருங்கு உறச் செல்கிறார்.
538
2442
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட
மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்
எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார்.
539
2443
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார்.
540
2444
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்.
541
2445
அப்போது அரையார் விரிகோவண ஆடை
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்.
542
2446
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்த
தேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்.
543
2447
வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல்
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்.
544
2448
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்.
545
2449
நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்று
பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டு
மாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்.
546
2450
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச்
செம் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச்
சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை
அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்.
547
2451
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த்
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்.
548
2452
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழி மழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில்.
549
2453
சேண் உயர் மாடப் புகலி உள்ளார்
    திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக்
காணும் விருப்பில் பெருகும் ஆசை
    கைம்மிகு காதல் கரை இகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
    பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை அகன்று போந்து வீழி
    மிழலையில் வந்து அணைந்தார்.
550
2454
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து
    ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து
    மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு
    மெய்ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள்
    முறைமையில் கொண்டு புக்கார்.
551
2455
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம்
    தம் பிரானாரைப் பணிந்து போந்து
நண்பில் பெருகிய காதல் கூர்ந்து
    ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார்
    பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு
    எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார்.
552
2456
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில்
    ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர்
    கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர்
    அருள் பெற்று போவது என்றே
அன்று புகலி அருமறையோர்க்கு அருள்
    செய்து அவர்க்கு முகம் அளித்தார்.
553
2457
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
    வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து
    பரம் பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர் பட்ட எல்லை இனிது செல்லத் திருத்
    தோணி மேவிய செல்வர் தாமே
கார் பட்ட வண்கைக் கவுணியர்க்கு கனவிடை
    முன் நின்று அருள் செய்கின்றார்.
554
2458
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம்
    தூமறை வீழி மிழலை தன்னுள்
சேண் உயர் விண்ணினின்று இழிந்த
    இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து
    அருள் செய்யப் பெரும் தவங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும்
    புளகத் தொடும் உணர்ந்தார்.
555
2459
அறி உற்ற சிந்தையராய் எழுந்தே
    அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த
    விண் இழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரைத் தோணி மேல்
    முன் வணங்கும்படி அங்குக் கண்டு
வாழ்ந்து குறியில் பெருகும் திருப்பதிகம்
    குலவிய கொள்கையில் பாடுகின்றார்.
556
2460
மைம் மரு பூங்குழல் என்று எடுத்து
    மாறில் பெரும் திருத்தோணி தன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு
    கோலம் குலாவு மிழலை தன்னுள்
செம்மை தரு விண் இழிந்த கோயில்
    திகழ்ந்தபடி இது என் கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி
    மகிழ்ந்தனர் வேதவாயர்.
557
2461
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம்
    பாடி திருக் கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார்
    ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா
    மறையோர் தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை
    திறத்தை அருள் செய்கின்றார்.
558
2462
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய
    பிரான் பெருமாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று
    விரும்பிய கோலம் பணிந்து போற்றி
வருவது மேல் கொண்ட காதல் கண்டு
    அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத் தருள் செய்து நீங்கள்
    சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
559
2463
என்று கவுணியப் பிள்ளையார் தாம்
    இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அம் கண்
    ஒழிய ஒருவாறு அகன்று போந்து
மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம்
    பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும்
    நியதியராய் உறைந்தார்.
560
2464
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத்
    திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும்
    பண்பின் வழாத் திருத் தொண்டர்
சூழ உரவுத் தமிழ்த் தொடை மாலை
    சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி
    இனிது அங்கு உறையும் நாளில்.
561
2465
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
    மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற
    மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப்
    பால் அறா வாயருடன் அரசும் பார் மேல்
கண் நுதலான் திருநீற்றுச் சார் வினோர்க்கும்
    கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்.
562
2466
வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய்
    இரு சுடராய் நீரும் ஆகி
ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள்
    அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி
    பரவி அன்று இரவு துயிலும் போது
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார்
    கனவில் அணைந்து அருளிச் செய்வார்.
563
2467
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய்
    உமை அடையாது எனினும் உம்பால்
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம்
    நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்
இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
    உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால்
அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள்
    புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
564
2468
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
    சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே
    நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக்
    கோயில் வலம் செய்யப் புகுந்த வேலி
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்
    அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்.
565
2469
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று
    கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க
நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல்
    விருந்தாய் உண்பதற்கு வருக என்று
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
    திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண்
    இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில்.
566
2470
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
    நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
    திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்
    திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
    விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்.
567
2471
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத்
    திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்
    பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
    காசு தனை வாசி பட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே
    கொள்வர் இது பிற்பாடு என்றார்.
568
2472
திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
    சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி
    வாசி படாது ஒழிவான் அந்தப்
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால்
    பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை
வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன்
    என்று எண்ணியது மனதுள் கொண்டார்.
569
2473
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு
    வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து
    போய் ஆவண வீதியினில் காட்ட
நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன
    நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில்
    அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்.
570
2474
அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி
    அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்துபொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
    மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவ
    பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கு
    அரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
571
2475
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி
    அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த
    புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப்
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத்
    தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார்
    தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்.
572
2476
நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
    நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலி நீர்த் தலையாலம்காடு மாடு
    பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி
நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி
    நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித்
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித்
    திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்.
573
2477
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
    நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
    பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு
    புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
    திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார்.
574
2478
மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால்
    அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும்
    திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட
    கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித்
    திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.
575
2479
கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும்
    கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும்
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை
    மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர்
    கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர்
    கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார்.
576
2480
முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை
    முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார்
    தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று
    சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
    வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார்.
577
2481
சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும்
    தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது மாதவர்கள்
    மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை
    இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல்
    உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே.
578
2482
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
    அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க்
    கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு
முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ
    முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்
படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்த
    பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்.
579
2483
அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த
    அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்கப்
    பெருமையினால் அன்று முதலாகப் பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும்
    தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று
    திருநாவுக்கு அரசருக்குச் செப்புகின்றார்.
580
2484
அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை
    அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே
    இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு
மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு
    மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது
    செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட.
581
2485
பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும்
    பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்
சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச்
    செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி
    நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட
ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர்
    ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
582
2486
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.
583
2487
கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார்.
584
2488
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
585
2489
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
586
2490
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே.
587
2491
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர்
நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.
588
2492
அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்.
589
2493
அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க
இரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து
திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள.
590
2494
வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்.
591
2495
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க
வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே.
592
2496
இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளிப் போக.
593
2497
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்
மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார்
எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா
அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்.
594
2498
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர்
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை
சங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார்.
595
2499
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்.
596
2500
நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்
பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக்
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்.
597
2501
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு
மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக்
கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப்
பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே.
598
2502
இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை.
599
2503
தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.
600
2504
பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.
601
2505
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியும் உக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை.
602
2506
வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான்
திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும்
குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும்
இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக.
603
2507
ஆங்கு அவர் தாங்கள் அம் கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்.
604
2508
இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்த
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.
605
2509
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனார் உம் மங்கையர்க்கு அரசியாரும்
சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்.
606
2510
காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே
போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்.
607
2511
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடைமாந்தர் அம் கண்
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்.
608
2512
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ
பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்
வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்.
609
2513
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்.
610
2514
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய
நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத்
தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.
611
2515
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர்
மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக்
குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும்
நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்.
612
2516
கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும்
கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார்.
613
2517
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்
    ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம்
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம்
    நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி
    வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக
    நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற.
614
2518
மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும்
    வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து
    பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை
    அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொற்ற தனி மன்னவருக்குப் புகலி மன்னர்
    சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்தபோது.
615
2519
அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த
    அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய
    எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்
    பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர்
    வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே.
616
2520
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
    திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும்
    அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
    புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர் என்று
கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
    காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்.
617
2521
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்
    வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப்
    பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி
    அருள் செய்து விடை கொடுத்து மன்னும்
காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக்
    கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்.
618
2522
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால்
    திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர்
    தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று
    ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர்
    ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே.
619
2523
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப.
620
2524
மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக்
கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்.
621
2525
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக்
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத்
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
622
2526
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப்
பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்.
623
2527
திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடி
இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார்.
624
2528
கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித்
திருந்திய சீர் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்.
625
2529
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்
கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும்
அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்
எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி.
626
2530
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவை
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து.
627
2531
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள்
கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கிச்
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்.
628
2532
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான்
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும் குன்றம்.
629
2533
கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி
தொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார்.
630
2534
இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப்
பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும்
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.
631
2535
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்.
632
2536
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்
கால்களும் தடுமாறும் ஆடிக் கண்களும் இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்.
633
2537
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச்
சிந்தையில் செற்றம் முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள்.
634
2538
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
635
2539
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்.
636
2540
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக
ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்.
637
2541
குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப்
பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின்
ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக்
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார்.
638
2542
கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார்
கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம்
ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்.
639
2543
மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை
உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர்.
640
2544
ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்.
641
2545
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல்
பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும்
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல்.
642
2546
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த
உள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை
கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.
643
2547
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி
தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.
644
2548
மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற
கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி
நங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்தி
இங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எர் கொள்ளும் என்றார்.
645
2549
மன்றலங் குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும்
வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை.
646
2550
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி
தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்.
647
2551
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப்
பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்.
648
2552
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச்
செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.
649
2553
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த
எண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த.
650
2554
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால்
அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம்
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட.
651
2555
பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொரு
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப.
652
2556
புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத்
தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம்
பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற.
653
2557
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான்
    எழுந்து அருளும் பொழுது இசைக்கும்
ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் கானம்
    உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம்
    செவி நிறை அமுது எனத் தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே
    அளப்பு அரும் களிப்பினர் ஆனார்.
654
2558
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
    அணைந்திடக் கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார்
    உடன் வரும் நல்தவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக்
    கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு
    உற அணைந்து முன் பணிந்தார்.
655
2559
நிலமிசை பணிந்த குலச் சிறையாரை
    நீடிய பெரும் தவத் தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம்
    படியின் நின்று எழாவகை கண்டு
மலர் மிசைப் புத்தேள் வழிபடும்
    புகலி வைதிகச் சேகரர் பாதம்
குலவி அங்கு அணைந்தார் தென்னவன்
    அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.
656
2560
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத்
    திருமுகத் தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து
    விரைந்து சென்றவர் தமை அணைந்து
கரகமலங்கள் பற்றியே எடுப்பக்
    கை தொழுது அவரும் முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
    வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.
657
2561
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும்
    திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம் பெருமான் தன் திரு அருள் பெருகும்
    நன்மை தான் வாலிதே என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண்
    மிசைதாழ்ந்து அடி வணங்கித்
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத்
    தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்.
658
2562
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும்
    இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால்
    எற்றைக்கும் திரு அருள் உடையோம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
    நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திரு நீற்று ஒளியினால் விளங்கும்
    மேன்மையும் படைத்தனம் என்பார்.
659
2563
இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு
    அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு
    எழுந்து அருளியது என்றே
அங்கு நீர் சென்று அடிபணிவீர் என்று அருள்
    செய்தார் எனத் தொழுதார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
    போற்றினார் புரவலன் அமைச்சர்.
660
2564
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல்
    அளவுஇலா அருள் புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி
    தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரைத் தோன்றுதலும்
    உயர் தவ தொண்டரை நோக்கி
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று
    எம்மருங்கினது என வினவ.
661
2565
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார்
    அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி
    முருகு அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி
    வியன் நெடும் கோபுரம் தோன்றும்
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து
    அருளும் திருவாலவாய் இது என்றார்.
662
2566
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
    துணைமலர்க் கரம் குவித்து அருளி
மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து
    மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது
    இதுவே என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல்
    பதிகம் பாடினார் குவலயம் போற்ற.
663
2567
பாடிய பதிகம் பரவியே வந்து
    பண்பு உடை அடியவரோடும்
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த
    திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
    நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர்
    கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.
664
2568
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த
கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்
மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்.
665
2569
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும்
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்.
666
2570
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து
சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்.
667
2571
சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய.
668
2572
பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார் தம்மைத் தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும்
தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த.
669
2573
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்
கரும் குழல் கற்றை மேல் குவிகைத்து அருளி உடையார்
பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப்
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.
670
2574
தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய
பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்
இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்.
671
2575
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து
மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே
பானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி
யானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார்.
672
2576
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு
வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார்.
673
2577
இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித்
துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது.
674
2578
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
மல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்.
675
2579
அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்.
676
2580
பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய.
677
2581
வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர்
பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்.
678
2582
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.
679
2583
மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்.
680
2584
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.
681
2585
புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத்
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்.
682
2586
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்
மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம்
மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப.
683
2587
என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பி
நன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண் நுதல் அடியார்
இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்.
684
2588
மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச்
சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப்
பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல.
685
2589
என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்
மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான்.
686
2590
மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப
செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்.
687
2591
வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும்
சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில்
வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்
இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார்.
688
2592
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்
போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான்
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.
689
2593
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம்
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார்.
690
2594
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான்.
691
2595
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல்
வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான்.
692
2596
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம்
நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார்.
693
2597
சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழு மலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்த
இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்.
694
2598
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார்
இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்.
695
2599
மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி
ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும்
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்.
696
2600
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்.
697
2601
ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார்.
698
2602
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்.
699
2603
மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும்
புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு
அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல்
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்.
700
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.1 திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - இரண்டாம் பகுதி
2604
திருமடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்
மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்
பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்.
701
2605
கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி
702
2606
என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்
மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார்.
703
2607
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்
பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்.
704
2608
பாண்டிமா தேவியார் தமது பொற்பில்
    பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும்
    அரசன் பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும்
    வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்
தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும்
    தீப்பிணி பையவே செல்க என்றார்.
705
2609
திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின்
மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்
பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே.
706
2610
செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப
வெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது
707
2611
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச்
சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி
708
2612
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து
கரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது
709
2613
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்
உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும்
வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்.
710
2614
வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை
காந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க
711
2615
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப்
புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக
712
2616
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல்
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்
713
2617
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார்
மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார்.
714
2618
மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
    வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில்
    மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த
    பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின்
    அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்.
715
2619
கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள்
    கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக்காவாய்
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி
    மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி
    பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று
    அமணரைப் பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்.
716
2620
பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற
717
2621
கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்.
718
2622
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று
719
2623
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்
மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார்.
720
2624
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற
ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்.
721
2625
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி
மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான்.
722
2626
என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்.
723
2627
பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்
மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு
நாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி
724
2628
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே
அன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
725
2629
திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன்
வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார்.
726
2630
பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை
ஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய
மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்.
727
2631
ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத்
தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.
728
2632
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார்
கொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய்
729
2633
உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்
தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்
கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு
730
2634
அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்
தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்
திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ.
731
2635
வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம்
வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால்
எஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது
732
2636
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம்
செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்.
733
2637
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார்.
734
2638
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்
அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள
செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால்
எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும்
735
2639
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று
பூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.
736
2640
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார்.
737
2641
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத்
தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்.
738
2642
கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி
739
2643
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்.
740
2644
நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்.
741
2645
அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில்
எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே
742
2646
பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத.
743
2647
கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்.
744
2648
தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப்
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார்
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை
745
2649
கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்
பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்.
746
2650
மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்
நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும்
747
2651
நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்
அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்.
748
2652
பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே
எய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான்.
749
2653
என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்
தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்
வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு
பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்.
750
2654
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்
நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த
கலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார்.
751
2655
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை
கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.
752
2656
செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று
விழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது
753
2657
பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்.
754
2658
பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத்
துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்.
755
2659
காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு
கோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.
756
2660
பிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார்
துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி
757
2661
தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள்
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும்
பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்.
758
2662
மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று
வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்
தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான்.
759
2663
ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி
மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி
760
2664
பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்
தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப
761
2665
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார்.
762
2666
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத்
தீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான்.
763
2667
தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி
764
2668
திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க
765
2669
உறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை
ஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்.
766
2670
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற
மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே
767
2671
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில்
வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்
துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும்
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான்.
768
2672
வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்.
769
2673
திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.
770
2674
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார்.
771
2675
மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த
ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான்.
772
2676
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்.
773
2677
சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால்
கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.
774
2678
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும்
தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்.
775
2679
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச்
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்.
776
2680
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச்
சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது என்றனர்.
777
2681
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான்
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர்.
778
2682
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான்.
779
2683
ஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி
780
2684
செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்.
781
2685
சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்
782
2686
அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்
783
2687
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி
784
2688
செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
785
2689
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே
786
2690
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்.
787
2691
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்
வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார்.
788
2692
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப
789
2693
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்.
790
2694
அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்
பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர்.
791
2695
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும்
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்.
792
2696
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்
துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான்.
793
2697
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்
சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார்.
794
2698
தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம்
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்.
795
2699
நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார்.
796
2700
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார்.
797
2701
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார்.
798
2702
மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற
799
2703
பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார்
வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்.
800
2704
தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்.
801
2705
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த
ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்
பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம்
மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார்.
802
2706
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம் என்பார்
பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார்.
803
2707
ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார்
நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்.
804
2708
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்
வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார்.
805
2709
நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார்
இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்
பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்
கருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார்.
806
2710
ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார்
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார்.
807
2711
தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார்.
808
2712
இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப்
பன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு
நன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்.
809
2713
தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான்
வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க
810
2714
பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்.
811
2715
கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்
பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு
812
2716
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்
வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்.
813
2717
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே.
814
2718
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்
தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்
பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.
815
2719
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.
816
2720
வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால்
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்.
817
2721
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற
818
2722
தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே
819
2723
உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்
820
2724
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று
இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச்
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்
821
2725
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்
822
2726
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே.
823
2727
சொன்ன வையகமும் துயர் தீர்கவே
என்னும் நீர்மை இக பரத்தில் உயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.
824
2728
அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார்.
825
2729
ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம்.
826
2730
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர்.
827
2731
வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெம் தற மற்றப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.
828
2732
தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்.
829
2733
தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்.
830
2734
எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்.
831
2735
ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால்
ஓதும் எல்லை உலப்பில ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
832
2736
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்.
833
2737
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்.
834
2738
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றதாம்.
835
2739
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப்
போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
836
2740
ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்.
837
2741
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்
கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்
838
2742
கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்
839
2743
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்.
840
2744
பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்
841
2745
மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார்.
842
2746
ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா
ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
843
2747
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்
844
2748
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்.
845
2749
திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல்
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி
846
2750
எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே
847
2751
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார்.
848
2752
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்
ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க
849
2753
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு
சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.
850
2754
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.
851
2755
மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே
852
2756
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்
கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற
853
2757
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை
854
2758
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்.
855
2759
தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்
ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்
போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.
856
2760
தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார்
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்.
857
2761
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்
மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே
858
2762
மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட
ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே
859
2763
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்
குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே
860
2764
அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று
பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்.
861
2765
எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்
862
2766
ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு
பால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று
மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார்.
863
2767
தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்
தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.
864
2768
கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்.
865
2769
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம்
மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட
866
2770
தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள
இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்.
867
2771
சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்
ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார்.
868
2772
நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்.
869
2773
திருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித்
தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே
870
2774
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே
வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.
871
2775
மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க
ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற
ஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்
872
2776
செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த
வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை
எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்.
873
2777
ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்
மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும்
போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார்.
874
2778
துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்.
875
2779
மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார்
தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்
பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்.
876
2780
அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ
இங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு
தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம்
செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார்.
877
2781
செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த
அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி
ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள
878
2782
சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப்
பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்.
879
2783
இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி
அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட
பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்
880
2784
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்.
881
2785
திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்
அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்.
882
2786
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை
காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார்
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத
883
2787
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
    தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தை
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர்
    பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே
யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு
    இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர்
    திருப்பரம் குன்றை நண்ணினாரே.
884
2788
ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்
    அணி ஆப்பன் ஊரை அணைந்து பணிந்துபாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு
    திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிர
    புரத்து வந்து அருளும் செல்வர் செங்கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை
    எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே.
885
2789
பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால்
    செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப்
    புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும்
    கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று
    உகைத்தார் நெல்வேலி குறுகினாரே.
886
2790
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி
    புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி
    நல்தொண்டர் உடன் நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க
    பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த
    திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
887
2791
செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித்
    திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
    மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்
    புடை வலம் கொண்டு உள் அணைவார் போற் செய்து
பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று
    பாடினார் மன்னவனும் பரவி ஏத்த
888
2792
சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த
    சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக்
    கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம்
கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க்
    குலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல
நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர்
    வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே
889
2793
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
    ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண்
    மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்
    கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத
    கிழி பெற்றார் உவகை உற்றார்.
890
2794
அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார்
    அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப்
    புணரி பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே
செப்ப அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்
    மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார்
    உலகு உய்ய ஞானம் உண்டார்.
891
2795
பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண்
    பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி
    வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார்
    கண் நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார்
    மதி மண மேற்குடியில் வந்தார்.
892
2796
அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த
    பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து
மன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
    மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும்
கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக்
    குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச்
    செல்வர் இனிது இருந்த நாளில்
893
2797
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு
    போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும்
மங்கையர்க்கு அரசியார் தாமும் தென்னர்
    மன்னவனும் மந்திரியார் தாமும் கூட
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன்
    போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில்
    ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று
894
2798
சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம்
    தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி
    மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை
    பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டை
    அகன்று மீண்டு அணையச் செல்வார்.
895
2799
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க
    பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும்
    பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம்
    கறை அணிந்தார் பாதாள ஈச்சுரமும் பாடி
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி
    முள்ளிவாய்க் கரை அணைந்தார் முந்நூல் மார்பர்
896
2800
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்
    பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால்
    அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை
    நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக்
    கண்டு அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை.
897
2801
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்
    பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும்
    மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக்
    கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன் மேல் நின்று
    நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட
898
2802
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால்
    ஓடம் செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம்
    பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட
    பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில்
    வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
899
2803
நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு
    நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி
    மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும்
    தன்மையால் அருள் தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண்
    புனிதனே எனப் பணிந்து போற்றிச் செய்தார்.
900
2804
போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும்
    நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம்
    உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம்
    அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடை
    நாயகர் கோயில் நண்ணினாரே.
901
2805
நீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண்
    நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை
    அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு
    மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார்
    கண் அருவி பரந்து பாய
902
2806
தென்னவர் கோன் முன் அமணர் செய்த
    வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாகி
என் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து
    இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்தி பரவிப்போந்து
    பண்பினிய தொண்டருடன் அங்குவைகி
மன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை
    வள்ளலார் நல்லாறு வணங்கிச் செல்வார்.
903
2807
சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து
    சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
    சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு
    இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம்
    பரசமய கோள் அரி வந்தான் என்று ஊத
904
2808
புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
    புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர்
    எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம்
    கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான
    தேரார்க்கும் கனன்று சொன்னார்.
905
2809
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன்
    வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின்
    ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது
செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து
    எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்று
    அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்.
906
2810
புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி
    பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை
    வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது
    இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
    முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
907
2811
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில்
    மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
    பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற
அருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்
    ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே
உரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம்
    உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார்.
908
2812
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க
    எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு இல் வலி மந்திரமாம் அசனி போல
    வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
    மேனியும் தலையினையும் வெவ்வேறாகக்
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து
    ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே
909
2813
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின் போர்
    ஏற்றவன் தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர்
    அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று
    விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம்
    ஒதுக என அவ் ஒலி வான் உற்றது அன்றே.
910
2814
அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எலாம்
    அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ
    வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு
    பொருள் பேசுவற்கு இசைவது என்று
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்
    தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்.
911
2815
அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை வந்த
    அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று
மெத்த மகிழ்ச்சியின் ஓடும் விரைந்து சென்று
    வெண் தரள சிவிகையின் நின்று இழிந்து வேறு ஓர்
சத்திர மண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன்
    எழுந்து அருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார்
    புகலி காவலர் போற்றிச் சென்றார்.
912
2816
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள்
    செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி வேத
    பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும்
    நண்ணூம் எனக் கூறுதலும் நன்மை சாராத்
தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
    சந்திர மண்டபமும் சார வந்தான்.
913
2817
அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும்
    பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும்
    சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம்
    போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன
    உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்.
914
2818
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
    கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே தன்மை
    புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து
    ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன
    பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்.
915
2819
என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து
    ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும்
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று
    நாட்டுகின்ற முத்தி தான் ஆவது என்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்
    நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய அகம் அந்த விவேகமுத்தி என்ன
    உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
916
2820
ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட
    அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித்
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும்
    தாம் வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக
    யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார்
    ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்.
917
2821
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன்
    கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும்
    இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை
    நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும்
    வரும் அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான்.
918
2822
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும்
    தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை
    ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி
    முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ
    இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்.
919
2823
இப்படியால் எய்தும் என இசைத்து நீ
    இங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்
மெய்ப் படியே கரணங்கள் உயிர் தாம் இங்கு
    வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது
செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு
    இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்
அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால்
    அம்முத்தி உடன் இன்பம் அணையாது என்றார்.
920
2824
அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி
    அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம்
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக்
    கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்
பெய்வகையே முத்தியினில் போனான் முன்பே
    பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும்
    இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்.
921
2825
உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன்
    உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல்
    இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு
    குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து
உணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும்
    விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்.
922
2826
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர்
    எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன
    அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத்
    தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால்
    காணாத காலத்துக்கு அதுவாம் என்றார்.
923
2827
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம்
    அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும்
    என்ற அவனுக்கு ஏறுகுமாறு அருளிச் செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன்
    மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள்
    பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
924
2828
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை
    பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் உடையவரை நோக்கிச் சைவம்
    அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே
அந்தமில் சீர் மறைகள் ஆதமங்கள் ஏனை
    அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்ய
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத்
    திரு மறையோர் சேவடிக்கீழ் சென்று தாழ்ந்தார்.
925
2829
அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை நோக்கம்
    அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார்
    முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை
    அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித்
    திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்.
926
2830
அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளி
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீசமா முனிவர்
எந்நகரில் எழுந்து அருளிற்று என்று அடியார் தமை வினவ.
927
2831
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப்
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்து
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்.
928
2832
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும்
ஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு
மைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச்
செப்ப அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.
929
பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும்
காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு
நாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்.
930
2834
அந்தணர் சூளா மணியார் பூந்துருத்திக்கு அணித்தாக
வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார்.
931
2835
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால்
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப்
பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்.
932
2836
திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த
நெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.
933
2837
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்
சந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.
934
2838
அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள் செய்யக்
செப்ப அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்
ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார்.
935
2839
அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார்.
936
2840
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார்.
937
2841
திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி.
938
2842
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்
முன் பணித்து ஆகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்
துன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி
என்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.
939
2843
பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக
மையறு சீர் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு
உய்யவந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.
940
2844
வாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமை
போக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞான மறை
தேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்.
941
2845
காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஒங்குதற்குச்
சூழும் பெரு வேலி ஆனீர் எனத் தொழுதார்.
942
2846
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்
வெள்ளம் அனைய புகழ் மாதினியர் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார்.
943
2847
தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித்
துன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
944
2848
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி
மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் என்னும்
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார்.
945
2849
அங்கணரைப் போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்.
946
2850
வாகீச மாமுனிவர் மன்னும் திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்
போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்.
947
2851
பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்
போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு
வேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளி
ஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்.
948
2852
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்
பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்
ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்.
949
2854
செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்
தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின்
மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்.
950
2854
தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே
அந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
எந் நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்
முன்னாக வேதம் முழங்க எதிர் கொண்டார்.
951
2855
போத நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம்
சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார்.
952
2856
அங்கம் மா நிலம் தெட்டுற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்
பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவுற்றார்.
953
2857
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்.
954
2858
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றி
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றி
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம்கையால் தொழுது ஏத்தி
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்.
955
2859
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு
மூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முகை மலர்க் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று
காதலித்தவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார்.
956
2860
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலியார் உடன் நீல கண்ட பெரும் பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்.
957
2861
அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப்
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி
958
2862
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்
கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்.
959
2863
தாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத்
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார்.
960
2864
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும் எனச் சொல்லி
மெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்
ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்போடு செல்வார்.
961
2865
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெரும் தொண்டர் எதிர் கொளப் பரமர் தன் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக் குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்.
962
2866
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
963
2867
வக்கரைப் பெருமான் தன்னை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்.
964
2868
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி.
965
2869
பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய்
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர்
சிர புரத்து வந்து அருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார்.
966
2870
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.
967
2871
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்.
968
2872
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறை அணி நல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்.
969
2874
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்.
970
2874
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது
தங்கு விருப்பில் வீற்று இருந்தார் தட்டாமறைகள் தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி
எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.
971
2875
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து
காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்.
972
2876
மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வட திசையில்
செங்கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார்.
973
2877
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத் தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்.
974
2878
சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு
பண்பு நீராடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார்.
975
2879
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தன் முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும்
காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
976
2880
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தம்மைப்
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.
977
2881
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்
மங்குலுற நீள் ஆண் பனையாய்க் காயா வாகக் கண்ட அமணர்
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல
978
2882
பரமனார் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்த்
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி.
979
2883
விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால்
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்.
980
2884
சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்
பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளி
ஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.
981
2885
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்த அமணர்
அந்நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்.
982
2886
பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்
கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்.
983
2887
அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்
கொங்கு மலர் நீர்க் குரங்கணி முட்டத்தைச் சென்று குறுகினார்.
984
2888
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்
மாதோர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
985
2889
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்.
986
2890
கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம்
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்
மடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.
987
2891
கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய்
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்.
988
2892
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடியான முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானமுட்ட ஆர்த்தனர்.
989
2894
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்
வாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்.
990
2894
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும்
புயல் பொழிந்ததாம் எனப் பூவினொடு பொன் சுண்ணம்
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்.
991
2895
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்
பின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்
முன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்.
992
2896
கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.
993
2897
செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்
கம்பவரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார்
பம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்து
அம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார்.
994
2898
பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று
உலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.
995
2899
பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார்.
996
2900
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால்
பெருகிய கண் மழை பொழியப் பெரும் புகலிப் பெரும் தகையார்
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்.
997
2901
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில்
பெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்று அருளும் பிள்ளையார்
மறப்பு அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்
அறம் பெரும் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்.
998
2902
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரைச் சேவடியில்
ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும்
பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.
999
2903
நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்
சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி
ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி
மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்.
1000
2904
எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்
தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்.
1001
2905
அப்பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார்
செப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய்
மைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்.
1002
2906
திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக்
கருமாலும் கருமாவாய் காண்பரிய கழல் தாங்கி
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்
பொருமாற்கு திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்.
1003
2907
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச்
செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
1004
2908
திருத்தொண்டர் பலர் சூழ திரு வில் கோலமும் பணிந்து
பொருட் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி
அருள் புகலி ஆண் தகையார் தக்கோலம் அணைந்து அருளி
விருப்பினோடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார்.
1005
2909
தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி
வழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த
பழுதில் செழும் தமிழ் மாலை பதிக இசை புனைந்து அருளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்.
1006
2910
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டர் உடன்
பொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர்த் திரு ஆலம் காட்டு அருகு.
1007
2911
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண
    ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்
    அம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்
    சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று
செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர்
    செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்.
1008
2912
மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
    மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை
    அயர்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு
    இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி
    மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்.
1009
2913
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச்
    சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார்
    இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே
    அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்
    பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்.
1010
2914
நீடும் இசைத் திருப் பதிகம் பாடிப் போற்றி
    நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை
மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது
    மாலையினில் திரு ஆல வனத்து மன்னி
ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம்
    அருளிச் செய்து அகம்மலர பாடி ஏத்திச்
சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து
    திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்.
1011
2915
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச்
    செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப்
    புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து
    வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார்
    என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்.
1012
2916
மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி
    வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள்
    பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும்
    முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை
உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க
    உற்றபெரு வேட்கை உடன் உவந்து சென்றார்.
1013
2917
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ
    மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச்
    சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள
    முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் வைகிப்
    பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
1014
2918
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்
    இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
    நிறை துவலை புடை சிதறி நிகழ் பலவாகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால்
    அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச்
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும்
    சிலை நிலத்தில் எழுந்து அருளி செல்லா நின்றார்.
1015
2919
மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல
    மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப்
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப்
    புரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத்
தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும்
    திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம்
    நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண.
1016
2920
கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த
    கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய
மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான
    மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி
    எய்தவரும் பெருமையவாம் எண் இலாத
தானமும் மற்று அவை கடந்து திருக் காளத்தி சார
    எழுந்து அருளினார் சண்பை வேந்தர்.
1017
2921
அம்பொன் மலைக் கொடி முலையாள் குழைத்த ஞானத்து
    அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த
    திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல
    வேடச் சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோருடன்
    விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்.
1018
2922
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல்
    சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும்
    வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவில் பெரும் தொண்டர் குழாம் தொழுது
    போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் திருமலை
    இம் மலைகளில் யாது என்று கேட்டார்.
1019
2923
வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறை
    வாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி
    வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல்
    பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம்
    வானவர் தானவர் என்று எடுத்துச் செல்வார்.
1020
2924
திருந்திய இன் இசை வகுப்பு திருக் கண்ணப்பர்
    திருத் தொண்டு சிறப்பித்துத் திகழ பாடிப்
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து
    பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல
    ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை
    அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்.
1021
2925
தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
    தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில்
    மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித்
    தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்
    வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
1022
2926
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
    உருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண்
    விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம்
    பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து
    எழுந்து பல முறையும் வணங்குகின்றார்.
1023
2927
பங்கயக் கண் அருவி நீர் பாய நின்று
    பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத்
    தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற
    அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப்
    புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்.
1024
2928
யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை
    ஏழ் உலகும் உடையானை எண் இலாத
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின்
    மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும்
    புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு
    இனிய திருப்பதியில் பயிலும் நாளில்.
1025
2929
அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும்
    அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று
    தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று
    இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி
செம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது
    திருப்பதிக இசை திருந்த பாடி.
1026
2930
கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி
    குலவு திருப் பருப்பகத்தின் கொள்கைபாடி
ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல
    பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம்
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப்
    புகலியார் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது
    மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார்.
1027
2931
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி
    போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது
    திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார்
    இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப்
    புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்.
1028
2932
மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
    மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து
    முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும்
    பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று
    அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.
1029
2933
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில்
    சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார்
    வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
    ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது
பெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் பெரும்
    பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார்.
1030
2934
மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும்
    தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில்
    மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர்
    தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று
    எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்.
1031
2935
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால்
    பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்
பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப்
    பரந்து இழியும் கண் அருவி பாய நின்று
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது
    புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்
ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார்
    உலகுய்ய உலவாத ஞானம் உண்டார்.
1032
2936
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல் புகழ்த் திரு மயிலாப் புரி பதியில்
மன்னு சீர்ப் பெரும் வணிகர் தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
1033
2937
அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்
பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப
வரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
1034
2938
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்
பொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச்
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
1035
2939
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்
பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்
செற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார்.
1036
2940
ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய்.
1037
2941
செல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ்
எல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால்
அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.
1038
2942
நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெரும் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு.
1039
2943
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்
கரியவாங்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து
தூரிய பூமகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்.
1040
2944
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்
பல் பெரும் கினை உடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவண மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்.
1041
2945
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்
ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து
மாறு இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்துப்
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார்.
1042
2946
சூத நல் விணை மங்கலத் தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த
சாதகத் தொடு சடங்குகள் தச தினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்.
1043
2947
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க.
1044
2948
திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்து
தங்கு பேர் ஒளிச் சீறடி தளி நடை பயில.
1045
2949
தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்
வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவிஇல் அஞ்சுடர் கொழுந்து என அணை உறும்பருவத்து
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழி ஆண்டு எய்த.
1046
2950
அழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்ன
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை மெல் கிளிக் குலம் என மனை இடை ஆடி.
1047
2951
பொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்து ஒடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர.
1048
2952
தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன்
அந்தமில் என அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்.
1049
2953
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத்
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து
மாயம் வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்.
1050
2954
நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்.
1051
2955
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று
1052
2956
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்.
1053
2957
எல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச்
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
1054
2958
ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின்
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து
கோல் தொடித் தளிர் கையினால் முகை மலர் கொய்ய.
1055
2959
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்.
1056
2960
மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்
செவ்வி நாண்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து.
1057
2961
நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ
மாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி.
1058
2962
தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக்
கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்.
1059
2963
விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய் சூழ்வார்.
1060
2964
மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்
பெரும் தடம் கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித்
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்.
1061
2965
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவில ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்.
1062
2966
சிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்.
1063
2967
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி
புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.
1064
2968
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.
1065
2969
உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால்
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்.
1066
2970
கன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப்
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்
மன்னும் பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால்.
1067
2971
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப்
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய
சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே
ஏலுமால் செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்.
1068
2972
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து
பண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை அந் நல் பதி உள்ளோர்
வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்.
1069
2973
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச்
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து.
1070
2974
மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்
புகரில் பொன் உலகம் இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.
1071
2975
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி
முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்
பொன் அடித் தலம் தலைமிசை புனைவான் என்று எழுவார்
அந்நகர் பெரும் தொண்டரும் உடன் செல அணைந்தார்.
1072
2976
ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித்
தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற.
1073
2977
மாறில் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று
ஈறிலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச.
1074
2978
காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்து
சூழ் இரும் பெரும் தொண்டர் முன் தொழுது எழுந்து அருளி
வாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டே
ஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார்.
1075
2979
அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்
பொய்த்த அச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி.
1076
2980
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி
மங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கிச்
செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
1077
2981
தேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்.
1078
2982
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி
ஆற்றும் இன் அருள் வணிகர் மேற் செல அருள் செய்வார்.
1079
2983
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப்
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில்
திருமதில் புறவாய்தலிற் கொணர்க என்று செப்ப.
1080
2984
அந்தமில் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து.
1081
2985
மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத
மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி.
1082
2986
அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத்
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்.
1083
2987
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க.
1084
2988
தொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
1085
2989
இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்
சிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவை பேர் செப்பி.
1086
2990
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார் தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்.
1087
2991
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்.
1088
2992
ஆன தன்மையின் அத்திரு பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்
ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்.
1089
2993
தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது
கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.
1090
2994
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு
அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்.
1091
2995
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப்
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.
1092
2996
தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கி
பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.
1093
2997
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர்
எங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.
1094
2998
கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம்
மன்னிய வதனம் செம் தாமரையினில் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற.
1095
2999
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்ட
வாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப.
1096
3000
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப.
1097
3001
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்
கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.
1098
3002
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு
மணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும்
அணி நிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட.
1099
3003
இளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்
அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையாக.
1100
3004
வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி
அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட.
1101
3005
எரியவிழ் காந்தள் மென்பூத் தலை தொடுத்து இசைய வைத்துத்
திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.
1102
3006
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச்
சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
1103
3007
காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி.
1104
3008
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப்
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.
1105
3009
வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை
கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்ட
தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி
புரிவுறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.
1106
3010
பூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க.
1107
3011
கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்.
1108
3012
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.
1109
3013
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்
தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்
பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்.
1110
3014
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ.
1111
3015
சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமே
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப்
பார் கெழு மனையில் படர்மின் என்றலும்.
1112
3016
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று
அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்.
1113
3017
மற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரை தகாது என.
1114
3018
வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்
தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல்
துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்.
1115
3019
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்
உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்.
1116
3020
பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்
வானுயர் கன்னி மாடத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
1117
3021
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்து
மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்
பாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார்.
1118
3022
தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழ
பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்
முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்.
1119
3023
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல்
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார்.
1120
3024
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகாக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு
தருவார் தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்.
1121
3025
மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்
புக்கருளி கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.
1122
3026
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று
வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச்
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்.
1123
3027
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப
விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள்
சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்.
1124
3028
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின்
பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக்
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்
செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்.
1125
3029
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து
மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில்
தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு.
1126
3030
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்.
1127
3031
இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.
1128
3032
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்
சிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்.
1129
3033
சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப்
பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து
மன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டு
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.
1130
3034
திருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்.
1131
3035
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறில் பெரும் தொண்டர் உடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி
என்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்.
1132
3036
ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி.
1133
3037
ஏறணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்.
1134
3038
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து
பரசி எழு திருப் புறவார் பனம் காட்டூர் முதலாய
விரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித்
திரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.
1135
3039
எல்லையில் ஞானத் தலைவர் எழுந்து அருள எதிர் கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பின் ஒடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்.
1136
3040
திரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி
உருகு பெரும் காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணிமாடப் பெரும் திரு வீதியை அணைந்தார்.
1137
3041
நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்
குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடு
தலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்.
1138
3042
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத
கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனிக் கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார்.
1139
3043
தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி
மண்டுபெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்ட பேரின் பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்.
1140
3044
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்
மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளி
பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்
இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்.
1141
3045
திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்
பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில்
இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்.
1142
3046
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்
தாங்கரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்
தேன் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.
1143
3047
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த அண்டகையார் அடி போற்றி
பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி
இன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள.
1144
3048
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும்
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக்
கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார்.
1145
3049
பல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கி
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.
1146
3050
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப்
புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்.
1147
3051
வாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம்
ஏழிசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்.
1148
3052
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான்
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு தனை உன்னி
நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி
வாண் நிலவு பெருங் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்.
1149
3053
முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப்
பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்
சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்.
1150
3054
பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பர் உடன்
சிரபுரத்துப் பெரும் தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.
1151
3055
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்து
தாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்து
ஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள்.
1152
3056
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எணையோர்
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.
1153
3057
வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தரவார் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி.
1154
3058
பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெரும் தவத்தால் பெற்றவரும்
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித்
திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்
பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.
1155
3059
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்
கூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்கு
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதணை
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்.
1156
3060
மற்றவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்
சுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும் நிலைமையராய்
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள.
1157
3061
அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்
இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என.
1158
3062
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்
பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்.
1159
3063
திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத்
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்க அரிய
பெருவாழ்வு பெற்றார் ஆய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்.
1160
3064
ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்க
போதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார்.
1161
3065
திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணி
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்
தருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார்.
1162
3066
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்
திக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத்
தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச்
செக்கர் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்.
1163
3067
ஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்
செப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்து ஒடும் சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்.
1164
3068
எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.
1165
3069
ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என
ஆன பேர் அந்தணர்கள் பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சி ஒடு மொழிவார்.
1166
3070
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு
எம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்
வம்மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்.
1167
3071
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திக்
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்
பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்.
1168
3072
திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி
அருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார்.
1169
3073
செல்வம் மலி திருப்புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்.
1170
3074
அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு
வருந்தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.
1171
3075
மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில்
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்.
1172
3076
சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக்
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து.
1173
3077
நீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு தொறும் நிரைத்து
மாடுயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவிப்
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்.
1174
3078
மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தொறும்
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள்
துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.
1175
3079
எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்.
1176
3080
மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக.
1177
3081
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில
மண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய
உண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க.
1178
3082
மா மறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்த
பூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த.
1179
3083
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்
பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்
துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈடங்கள் மிகப் பெருக.
1180
3084
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்
தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்.
1181
3085
மாறிலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்
கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்.
1182
3086
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்.
1183
3087
நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த
புகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப்
பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்.
1184
3088
செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்.
1185
3089
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல்
மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி.
1186
3090
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய
சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்
சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த.
1187
3091
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்
கொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே.
1188
3092
நிறைந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும்
புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல்
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன்.
1189
3093
அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் தகையார்
தஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்
செஞ்சுடர்க் கதிர் பேரணி அணிந்தன திசைகள்.
1190
3094
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்
வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்.
1191
3095
நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்
மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி.
1192
3096
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்
விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி.
1193
3097
சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து.
1194
3098
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி
மண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக்
கொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு.
1195
3099
ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்
சீலமார் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்.
1196
3100
காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல
வாழி மா மறை முழங்கிட வளம்பதி வணங்கி
நீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்.
1197
3101
யான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக்
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்.
1198
3102
சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே.
1199
3103
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக.
1200
3104
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண.
1201
3105
சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகையிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க.
1202
3106
அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்
மறுவறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்
குறி நிலை பெற்ற தொண்டர் குழாமாகி ஏக.
1203
3107
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவின் ஓடு
மஞ்சுறை விசும்பின் மீது மாண அணி காணச் சென்றார்.
1204
3108
மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்ற இத் தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல.
1205
3109
தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்.
1206
3110
பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்.
1207
3111
நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி
காதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப்
பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்.
1208
3112
பொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி
விற்பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்.
1209
3113
திருவடி மலர் மேல் பூத்த செழு நகைச் சோதி என்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.
1210
3114
தண் சுடர் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த
கண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தை
வெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி.
1211
3115
ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி.
1212
3116
வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்
தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி.
1213
3117
திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி
பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில்
வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி.
1214
3118
நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது
மேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்
பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.
1215
3119
இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கைவினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை
எவ்வுலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.
1216
3120
அழகினுக்கு அணியாம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி
மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து
முழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது.
1217
3121
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.
1218
3122
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர்
அடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல
வடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.
1219
3123
சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம்
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று.
1220
3124
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ்
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.
1221
3125
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறும் சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்தவேலை
1222
3126
செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்
பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்.
1223
3127
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
1224
3128
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச
மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்.
1225
3129
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்
பன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார்.
1226
3130
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்
நிரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம்
நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில்
உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்.
1227
3131
ஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார்.
1228
3132
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து
கதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்
விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்.
1229
3133
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம் பொன் இம வரை கலந்தது என்ன
அங்கு அவர் செம் பொன் மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார்.
1230
3134
அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த
இகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.
1231
3135
திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்
அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்
பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்.
1232
3136
வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்றுன்னி.
1233
3137
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்.
1234
3138
பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்பார்
தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்.
1235
3139
நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செம்கை
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ண
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச்
சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்.
1236
3140
ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி
நாகமார் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை
மாகமார் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை
மேகமொடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்.
1237
3141
புனித மெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்
குனி சிலை புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி.
1238
3142
பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர்
முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையின் ஓடு
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய.
1239
3143
மறையொலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மலக
நிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப்
பொறை அணி முந்நூல் மார்பர் புகரில் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி.
1240
3144
அருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு
ஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில்
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று
திருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.
1241
3145
மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர்
தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும்
அந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க.
1242
3146
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக்
குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்.
1243
3147
சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித்
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்பு கூட
நவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க.
1244
3148
காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்
பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட.
1245
3149
தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று
மூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி.
1246
3150
கோயில் உட் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.
1247
3151
ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனமானம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.
1248
3152
வரு முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்.
1249
3153
சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்
பார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார்.
1250
3154
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.
1251
3155
ஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்.
1252
3156
காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித்
தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்
போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்.
1253
3157
பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப
வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்
தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்.
1254
3158
கண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்
எண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்.
1255
3159
அரும் தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்.
1256
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
3160
நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும்
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான்
பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால்.
1
3161
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு
2
3162
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்
உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
3
3163
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக்
காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்.
4
3164
இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான்
மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்.
5
3165
அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார்
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்.
6
3166
புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க்
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று
துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்.
7
3167
நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு
இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத்
தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு
மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன்.
8
3168
திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்.
9
3169
தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்.
10
3170
செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின்
இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல்
பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்.
11
3171
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப்
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்
12
3172
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார்.
13
3173
ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி
நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப்
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல்
காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்.
14
3174
அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து
செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.
15
3175
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.
16
3176
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட
அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று
17
3177
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்.
18
3178
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும்
தண்ணிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று.
19
3179
ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்.
20
3180
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி
மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்
புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்.
21
3181
தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச்
செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர்.
22
3182
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார்
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர்.
23
3183
கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி
மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின்
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின்
ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து.
24
3184
குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து
வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல்.
25
3185
அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து
நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு
இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்.
26
3186
நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும்
போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார்
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப்
போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார்.
27
3187
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார்.
28
3188
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார்
மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்.
29
3189
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள்
செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக்
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்.
30
3190
குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண்
அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்ச
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்.
31
3191
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப்
பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்.
32
3192
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி
ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக்
கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்.
33
3193
தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால்
சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்.
34
3194
பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி.
35
3195
வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து
மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி
ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார்.
36
3196
செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார்
நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா.
37
3197
ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்.
38
3198
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக்
கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத்
தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப்
படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார்.
39
3199
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்.
40
3200
வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும்
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக்
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை.
41
3201
சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால்
மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி
நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார்.
42
3202
அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச்
செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
43
3203
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி
மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து.
44
3204
இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்.
45
3205
செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார்.
46
3206
சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார்.
47
3207
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப
மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால்.
48
3208
துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார்.
49
3209
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம்
பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி.
50
3210
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து.
51
3211
பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே
எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும்
பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர்.
52
3212
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்.
53
3213
வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி
அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும்
உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.
54
3214
வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள்
அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார்.
55
3215
பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி
வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை.
56
3216
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி
நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன்
மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து.
57
3217
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார்.
58
3218
படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய
விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத்
தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்.
59
3219
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும்
மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார்.
60
3220
செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி
தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள்.
61
3221
புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில்
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில்.
62
3222
விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார்.
63
3223
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார்
தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்.
64
3224
மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன்
அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை
முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
65
3225
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து
மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார்.
66
3226
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார்.
67
3227
அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்
தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்.
68
3228
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய
சொல்லூ தியமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள்அடைந்து வலம் கொண்டு அடி பணிவார்.
69
3229
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக்
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின்
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர்
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்.
70
3230
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்
சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.
71
3231
மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து
நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.
72
3232
அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக்
குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து.
73
3233
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி
தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து
பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்.
74
3234
செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர்
எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.
75
3235
மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி.
76
3236
வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித்
தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்.
77
3237
சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார்.
78
3238
சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று.
79
3239
அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால்
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால்
முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல்
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்.
80
3240
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
    நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து
    அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார்
    இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என்
    நாவும் என வழுத்தினார் தொண்டர்.
81
3241
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும்
    ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார்
    விழுநிதிக் குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி
    வணங்கி அப்பதி இடை வைகி
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள்
    இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்.
82
3242
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின்
    அஞ்சு ஆடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி
    இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்
பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப்
    பாங்கு அமர் புடை வலம் கொண்டு
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார்
    தோன்றும் கங்காளரைக் கண்டார்.
83
3243
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம்
    பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு
    திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று
    ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம்
    அருந் தமிழ் புனைந்தார்.
84
3244
பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச்
    சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக்
கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது
    கலந்து இனிது இருந்து போந்து அருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக
    விமலர் தம் பதி பல வணங்கிக்
குரவலர் சோலை அணி திருப் பாண்டிக்
    கொடு முடி அணைந்தனர் கொங்கில்.
85
3245
கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க்
    கொடு முடிக் கோயில் முன் குறுகிச்
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து
    சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது
    புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது
    என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப.
86
3246
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம
    அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக
    இடை அறாது இயம்பும் என்றும் இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப்
    பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார்
    நமச்சிவாயத் திருப் பதிகம்.
87
3247
உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம்
    உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தை உடன் திரு அருளால்
    நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர் தாள்
    போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக்
குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப்
    பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்.
88
3248
அத் திருப்பதியை அணைந்து முன்
    ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு
    மேவுவார் தம் எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல்
    நீடிய கோலம் நேர் காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக்
    கலுழி நீர் பொழிதரக் கண்டார்.
89
3249
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து
    கரை இல் அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம்
    புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத்
    தலைப்படக் கிடைத்த பின் சைவ
ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை
    விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார்.
90
3250
அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
    அன்பு அனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன்
    பரவி வளம் பதி அதன் இடை மருவி
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார்
    புரி நடம் கும்பிடப் பெற்றால்
என் இனிப் புறம் போய் எய்துவது என்று
    மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்.
91
3251
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
    அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து
    பரமர் தம் பதிபல பணிந்து
மேய வண் தமிழால் விருப் பொடும்
    பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார்
    தென் திசை கற்குடிமலையில்.
92
3252
வீடு தரும் இக் கல் குடியில்
    விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
    நிறைந்த சிந்தை உடன் பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள்
    பலவும் அணைந்து இறைஞ்சி
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை
    மேல் சென்று அணைந்தார்.
93
3253
செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார்.
94
3254
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச்
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார்.
95
3255
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே.
96
3256
அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில்
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்.
97
3257
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று
ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்.
98
3258
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார்.
99
3259
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து
கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார.
100
3260
செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு
மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு.
101
3261
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்
இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன
குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச்
சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.
102
3262
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்.
103
3263
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம்
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி
நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார்.
104
3264
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று.
105
3265
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட.
106
3266
பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன்
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்.
107
3267
அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்.
108
3268
என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர்
வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில்
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார்
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று.
109
3269
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று
வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்.
110
3270
மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்
சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்.
111
3271
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன்
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்.
112
3272
ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின்
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்
நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து
நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய.
113
3273
பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள.
114
3274
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து
    மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள்
    வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை
    சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு
    எனும் களிப்பால் நயந்து பாடி.
115
3275
மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து
    திரு வீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள்
    தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன்பதியை
    வணங்கிப் போய் மறலி வீழத்
தாள் ஆண்மை கொண்டவர் தம்
    கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்.
116
3276
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக்
    கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை
    இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப்
    புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்
    மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்.
117
3277
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக்
    கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு
    மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று
    ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு
    புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி.
118
3278
திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித்
    தேவர் பெருமானார் தம் கோயில் வாயில்
உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே
    உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப்
    போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென்
கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான்
    நாட்டு முள்ளூரில் கலந்த போது.
119
3279
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது
    கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு
தூநாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய
    துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும்
    வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த
    திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார்.
120
3280
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து
    எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு
    செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி
    அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட
    மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
121
3281
காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக்
காதல் நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து.
122
3282
எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி
நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி
மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும்
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார்.
123
3283
செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும்
மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு
எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப்
பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்.
124
3284
மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத
சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து
தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்.
125
3285
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப்
பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்.
126
3286
நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்
தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல.
127
3287
என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்
நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று.
128
3288
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன்
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப்
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்.
129
3289
மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி
முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர்
கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்.
130
3290
நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று
மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ
சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர்.
131
3291
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்
பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து.
132
3292
முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்.
133
3293
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக்
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்.
134
3294
கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால்
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார்.
135
3295
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து
மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க
நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்.
136
3296
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்
பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்.
137
3297
கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித்
திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார்
விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்.
138
3298
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து
அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச்
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார்.
139
3299
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப்
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம்
தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன்
துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்.
140
3300
பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்.
141
3301
இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும்
வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும்
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார்.
142
3302
பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும்
கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்
துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார்.
143
3303
விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக்
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார்.
144
3304
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி.
145
3305
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின்
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்.
146
3306
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்.
147
3307
தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து
பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய்
மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்.
148
3308
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல்
பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த்
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்.
149
3309
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்.
150
3310
அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில்
ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்
மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார்.
151
3311
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்.
152
3312
அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக்
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்.
153
3313
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்.
154
3314
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று
தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய்
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்.
155
3315
உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி
பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்
கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார்.
156
3316
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென்
பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார்
மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து.
157
3317
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன்
வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி.
158
3318
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்
சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன்
காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என.
159
3319
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப்
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச்
சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி.
160
3320
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப்
பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால்.
161
3321
சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக்
கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார்.
162
3322
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர்
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்.
163
3323
குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு
வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப்
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்.
164
3324
கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி
உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்.
165
3325
அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று
மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக்
கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார்.
166
3326
சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்
பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்.
167
3327
திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப்
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்.
168
3328
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப்
பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச்
செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார்.
169
3329
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்.
170
3330
நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப்
பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்.
171
3331
தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள்
தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி
வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே
எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்.
172
3332
தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித்
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார்.
173
3333
பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய்
நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி
ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக்
கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்.
174
3334
அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக்
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்.
175
3335
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்
மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்.
176
3336
மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச்
செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார்.
177
3337
வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக்
கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப்
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக்
கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்.
178
3338
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார்.
179
3339
வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே
நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்.
180
3340
திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே
பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண்
உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி.
181
3341
முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
182
3342
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச்
சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்.
183
3343
அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்
இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார்.
184
3344
மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப்
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார்.
185
3345
ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார்.
186
3346
ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்
சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு
வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர்.
187
3347
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்.
188
3348
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்.
189
3349
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம்
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்.
190
3350
ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்.
191
3351
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்.
192
3352
பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர்
ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார்.
193
3353
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்.
194
3354
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப்
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர்
சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்.
195
3355
தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும்
அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்.
196
3356
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்.
197
3357
வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து
திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்.
198
3358
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார்
தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார்.
199
3359
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள
எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார்
வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்.
200
3360
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி
அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர்.
201
3361
ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச்
சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்.
202
3362
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன்
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்.
203
3363
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப்
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்.
204
3364
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத்
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்
கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்.
205
3365
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநித்திதையார்
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர்
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
206
3366
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்
பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார்
ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.
207
3367
மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கிலியார்
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலையாயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்.
208
3368
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார் தம் கண் மனைவியார்க்கு உரைப்பார்.
209
3369
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார்.
210
3370
தாயாரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் திரு அருளே
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்(று)
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்.
211
3371
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது எனத்
தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்து தை வந்தது நீங்க
வாங்கு சிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என்? என்றார்.
212
3372
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என.
213
3373
அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுகப்
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான்
சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார்.
214
3374
தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான்
மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்.
215
3375
தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச்
செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப்பி
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார்.
216
3376
அணங்கே ஆகும் இவள் செய்கை
    அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை
    அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள் தான்
    குறித்த படியே ஒற்றி நகர்ப்
பணம் கொள் அரவச் சடையார் சடையார்தம்
    பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார்.
217
3377
பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடம் சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று.
218
3378
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே
மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்
சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்.
219
3379
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமை காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி.
220
3380
யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்
தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில்.
221
3381
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து.
222
3382
பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மென் கொடி அனையார்
வண்டுமருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்.
223
3383
அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயிலுள் புகுந்தார்.
224
3384
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப்
பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து
தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீகத் தடம் நிகழ் பூந்திருமண்டபத் தின் உள் புகுந்தார்.
225
3385
அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து
மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார்.
226
3386
கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச்
சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை
காவாதவர் பால் போய் விழத் தம் பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்துற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்.
227
3387
இன்ன பரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப்புதியமதி
தன்னுள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும்.
228
3388
அங்கு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன
இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார்.
229
3389
மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனை வருத்தித்
தன்னார் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே
என்னாருயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப்
பொன்னார் இதழி முடியார் முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார்.
230
3390
மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஓற்றியூர் அமர்ந்த
இலகு சோதி பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்.
231
3391
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண்
கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்(கு)
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என.
232
3392
அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் என் நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன்யான்
தண்ணிலா மின் ஒளிர் பவளச் சடையீர் அருளும் எனத் தளர்வார்.
233
3393
மதிவாண் முடியார் மகிழ் கோயில் புறத்தோர் மருங்கு வந்து இருப்பக்
கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார்
முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய.
234
3394
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்டகவலை ஒழிக என்ன.
235
3395
அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி அளித்தீர் உயிர் காக்க
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி
மன்றல் மலர்ச் சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்.
236
3396
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலியாராம்
தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்.
237
3397
தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து) அடியேன் உய்ய எழுந்து அருளும்
பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்.
238
3398
சாரும் தவத்துச் சங்கிலி! கேள்; சால என்பால் அன்புடையான்
மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை இரந்தான்
வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்.
239
3399
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண்
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய
சீத மலர் தாமரை அடிக்கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.
240
3400
எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான் இமையோர்
தம் பிரானே அருள் தலைமேல் கொண்டேன் தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்
கொம்பின் ஆகங்கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்.
241
3401
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திருவாரூரின் கண் அவர் தாம் மகிழ்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார் பீர் என்றார் குன்றா விளக்கு அனையார்.
242
3402
மற்றவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன் தொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்
அற்றமுறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி.
243
3403
வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித்
தூய மனம் மகிழ்து இருந்த தோழனார் பால் அணைந்து
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால்
ஆயதொரு குறை உன்னால் அமைப்பதுள என்று அருள.
244
3404
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்(கு)
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இவ்விரவே செய்த என அருள் செய்தார்.
245
3405
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள.
246
3406
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் எனக் குறிப்பால்
தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்.
247
3407
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்(கு)
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில்விடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்.
248
3408
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள
உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம்பிரானே! அரியது இனி எனக்கு என்? என ஏத்தி.
249
3409
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச்
செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ?
துஞ்சிருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்.
250
3410
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே
கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள.
251
3411
மற்றவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிய அரியீர்
அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப்
பெற்றது யான் எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார்.
252
3412
தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ்விரவின் கண்
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி.
253
3413
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்.
254
3414
சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக்
கோயிலின் முன் காலம் அது ஆகவே குரித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்.
255
3415
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர் இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் ஒதுங்கி உட்புகுந்தார்.
256
3416
அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்!
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத்
திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச்
சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்.
257
3417
எம் பெருமான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள்
தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும்.
258
3418
மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனமருள்வார்
ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில்
ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ்க் கீழ் அவர் போதப் போய் அணைந்தார்.
259
3419
தாவாத பெருந் தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார்
பூவார் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
260
3420
மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக்
காவியினேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப்
பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்.
261
3421
திருநாவலூராளி தம் உடைய செயல் முற்றிப்
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப்
பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்.
262
3422
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து
கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர.
263
3423
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள
நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.
264
3424
நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்.
265
3425
மண்ணிறைந்த பெரும் செல்வத்து திரு ஒற்றியூர் மன்னும்
எண்ணிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக்
கண்ணிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார்.
266
3426
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே
வண்டமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்.
267
3427
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும்
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண்
ஊழியாம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம்.
268
3428
இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால்
சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல.
269
3429
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார்.
270
3430
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான்
ஒண்ணுதலார் புடை பரந்த ஒலக்கம் அதன் இடையே
பண்ணமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்
கண்ணுற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார்.
271
3431
பூங்கோயில் அமர்ந்தாரை புற்றிடங்கொண்டு இருந்தாரை
நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார்
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்.
272
3432
மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்.
273
3433
பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர்
தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால்
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்.
274
3434
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்
மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால்
இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானை
எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து.
275
3435
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல்
    பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார்
    மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே
    எய்து வெம் துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி
    பணிந்து சாலவும் பல பல நனைவார்.
276
3436
அங்கு நாதர் செய் அருளது ஆக
    அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால்
    போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில்
    சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர்
    என்று சாற்றிய தன்மையில் பாடி.
277
3437
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும்
    தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களை எனப் பரவிக் குறித்த
    காதலின் நெறிக் கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட
    மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக்
    காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார்.
278
3438
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக
    அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால்
    குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற
    வன்தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி
இணங்கிலா மொழியால் உளோம் போகீர்
    என்று இயம்பினார் ஏதிலார் போல.
279
3439
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்.
280
3440
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்
பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாய
என்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்று
மன்னு பெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்.
281
3441
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பர் உடன்
பங்கயப் பூந்தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித்
தங்குவார் அம்மைத் திரு தலையாலே வலம் கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திருவாலங் காட்டின் அயல்.
282
3442
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்.
283
3443
தேன் நிலவு பொழில் கச்சிக் காமக் கோட்டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால்
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன்
வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன் தொண்டர்.
284
3444
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய் தொல் உலகம்
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுதில் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி.
285
3445
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்.
286
3446
பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச்
செங்கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு
மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்.
287
3447
ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.
288
3448
பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன்
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச்
சூடிய அஞ்சலியினராய்த் தொழுது புறம் போந்து அன்பு
கூடிய மெய்த்தொண்டர் உடன் கும்பிட்டு இனிது அமர்வார்.
289
3449
மா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப்
பூ மலிவார் சடையாரைப் போற்றி அருளது ஆகத்
தே மலர்வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார்
பா மலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி.
290
3450
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று
சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்.
291
3451
மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப்
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார்
அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்.
292
3452
அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்
தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செங்கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு.
293
3453
அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்.
294
3454
பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள்
விரவி மழ விடை உயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி
உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி
அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார்.
295
3455
அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.
296
3456
திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய்
விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல்
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருளவேண்டும் என வணங்குவார்.
297
3457
பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார்
விரவிய இப் பிணி அடையத் தவிப்பதற்கு வேறு ஆக
வரமலர் வண்டறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக்
கரவில் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார்.
298
3458
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி
அக்கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்.
299
3459
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டு பெரும் கதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்.
300
3460
பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது
எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய்
கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்.
301
3461
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார்
நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்.
302
3462
பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்.
303
3463
ஆறணியுஞ் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்டாத்து உள் இடை தெரிந்து
மாறில் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார்.
304
3464
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்.
305
3465
சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக்
கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்து
தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்.
306
3466
வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித்
தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்.
307
3467
திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த
பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதைக் கண்களால் பருகுதற்கு
மருவார்வத்துடன் மற்றைகண் தாரீர் என வணங்கி.
308
3468
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்.
309
3469
பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச்
சீத மலர்க் கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய்.
310
3470
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி
எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த
செந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்.
311
3471
காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகை கோயில்
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து
சீலம் உடைய அன்பர் உடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார்.
312
3472
நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல் கங்குலாகிக் கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீதூரப் புல்வார் சில நாள் போன அதன்பின்.
313
3473
செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்.
314
3474
மென் பூஞ்சயனத்து இடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார்
பொன் பூந்தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார்
என்பூடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்.
315
3475
ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப்
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்.
316
3476
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார்.
317
3477
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர்
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்லச் செல விட்டார்.
318
3478
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்னேரிடையார் முன் எய்தி
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார்.
319
3479
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத்துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார்.
320
3480
போந்து புகுந்த படி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்த சிந்தை ஆகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமகக் கடலுள்.
321
3481
அருகு சூழ்ந்தார் துயின்று திருஅந்தயாமம் பணி மடங்கிப்
பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
322
3482
முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளி
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப்
பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்.
323
3483
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத்
தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய.
324
3484
தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார்.
325
3485
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று.
326
3486
அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய
வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம்
கொடியேர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து.
327
3487
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரனாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என.
328
3488
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித்
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே
பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார்.
329
3489
எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண்ணகைப் பரவை முகில் சேர் மாடத்து இடை செல்ல
நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார்.
330
3490
அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவரியர்
வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி
தொண்டனார் தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்து அருள.
331
3491
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன்போக.
332
3492
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ்விருடிகளும்
மருவு நண்பின் நிதிக் கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப்
பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத.
333
3493
மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும்
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர்க்கண் பரவையார் திருமாளிகையை நேர் நோக்கி.
334
3494
இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின்தொடர
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம்
பிறை கொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது.
335
3495
பெரு வீரையினும் மிக முழங்கிப்பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர்
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாமால்.
336
3496
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூடத்தம்
பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார்.
337
3497
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாகும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து.
338
3498
பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்திப்
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே
பாதி மதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்.
339
3499
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை
முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண்
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணிமார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார்.
340
3500
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன
அங்கயல் விழியினாரும் அதனை நீர் அருளிச் செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி.
341
3501
என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்
பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன
நன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்.
342
3502
பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி
இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்.
343
3503
நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி
நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னையான் வேண்டிக் கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளிச் செய்தார்.
344
3504
அரு மறை முனிவரான ஐயரைத் தையலார் தாம்
கருமம் ஈதாக நீர் இக் கடைத் தலை வருகை மற்(று)உம்
பெருமைக்குத் தகுவது அன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார்.
345
3505
நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்
தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம்
வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.
346
3506
தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர்
நாதரை அறிவிலாதே நன்நுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உட் கொள்வார்.
347
3507
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ
நாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான்
ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்
சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று.
348
3508
வழி எதிர் கொள்ளச் செல்வர் வரவு காணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார்.
349
3509
பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போன
அரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில்
இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.
350
3510
சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார்.
351
3511
அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார்
நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தம் இல்லம் நண்ணிக்
கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்.
352
3512
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று.
353
3513
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்
நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்.
354
3514
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்றுவலிய ஆள் கொண்டபற்று என்
நேவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்.
355
3515
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக்
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார்.
356
3516
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்தாமும்
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடித் தொழும்பன் ஏனைப்
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற.
357
3517
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப்
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்
முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப்
பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்.
358
3518
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்பு
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதவர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்.
359
3519
கண் துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டு அணைந்த வரை யான் உட்கெண்டிலேன் பாவியேன் என்று
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில்.
360
3520
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மை
அறிவுறு கோலத் தோடும் அளவில் பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து.
361
3521
பாரிடத் தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே
பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால்
சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே.
362
3522
ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்.
363
3523
அரி அயற்கு அரியர் தாமுமாய் இழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம் முன் போல் மாறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்.
364
3524
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த
இரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ என்பார்.
365
3525
துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது
அளிவரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல் வீராகி
எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்.
366
3526
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்.
367
3527
ஆதியும் மேலும் மாலயன் நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார்
பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்.
368
3528
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர்
மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார்.
369
3529
அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார்
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூரப்
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி
முன்புற நேரும் கண் இணை தானும் முகிழாரால்.
370
3530
அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம்
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள்
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார்.
371
3531
எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத்
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம்
நம்பி இனப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன.
372
3532
நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார்.
373
3533
என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அச் சே இழை பால் என்று அருள் செய்து
வென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ.
374
3534
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது.
375
3535
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம் சிகரம் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட.
376
3536
மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும்
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல.
377
3537
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும்
மை வளர் நெடுங்கணாரும் மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.
378
3538
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக்
காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித்
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத்தாமும்
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்.
379
3539
வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும்
தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார்.
380
3540
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த
திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றி சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சிவாய்ப்ப
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.
381
3541
ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங்கொண்டு ஆண்ட
நீரணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி
பாரணி விளக்கும் செஞ்சொல்பதிக மாலைகளும் சாத்தி
தாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.
382
3542
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று
தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார்.
383
3543
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்.
384
3544
காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய பாததாமரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது வருவது ஆகி
ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று.
385
3545
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று.
386
3546
அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவி அங்குஇருந்தான் தன்னை
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி.
387
3547
ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோன் ஆர் தாம் எண்ணிப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவர் ஆகி
வேறினி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங்கொன்றை
ஆறிடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.
388
3548
நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி
வாடுறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்.
389
3549
ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து
பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்.
390
3550
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய
எந்தமையாளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றி
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு.
391
3551
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம்
தம் பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து.
392
3552
மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.
393
3553
வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர்.
394
3554
அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வரும்தி செப்பி விட்டார்.
395
3555
நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டு
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார்.
396
3556
மற்றவன் இங்கு வந்து தீர்பதன் முன் நான் மாயப்
பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால்
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே.
397
3557
கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும்
பொருவரும் கணவரோடு போவது புரியும் காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்.
398
3558
கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப்
புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்
துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.
399
3559
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி
மெய்மையாம் விருப்பின்னோடும் மேவி உள் புகுந்து மிக்க
மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது.
400
3560
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்ற
ஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார்.
401
3561
மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத்
தீது அணை வில்லை ஏறும் என் மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்.
402
3562
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்.
403
3563
கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற
ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
404
3564
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற.
405
3565
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவரும் மகிழ்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி.
406
3566
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்
மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால்.
407
3567
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில்
தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே
செங்கண் மால் விடையார் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினேடும்.
408
3568
நள்ளிருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப்புக்கேன்
உள்ளுணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப.
409
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.3 திருமூல நாயனார் புராணம்
3569
அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்
நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.
1
3570
மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்.
2
3571
மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர்
பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை
அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்.
3
3572
கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார்.
4
3573
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித்
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்.
5
3574
நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்
கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர்
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார்.
6
3575
எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச்
செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்.
7
3576
தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.
8
3577
காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார்.
9
3578
அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப்
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள்
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார்.
10
3579
அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான்
வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை
வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான்.
11
3580
மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து
சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ
உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார்.
12
3581
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்.
13
3582
பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால்.
14
3583
ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம்
காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப்
பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார்.
15
3584
வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச்
சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார்.
16
3585
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார்
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள்
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார்.
17
3586
அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர
இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப்
பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார்.
18
3587
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள்
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார்.
19
3588
பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில்
வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார்
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார்.
20
3589
பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல்
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி
மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார்.
21
3590
இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள்
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார்.
22
3591
தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்
கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார்.
23
3592
சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச்
செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார்.
24
3593
ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி
மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த்
தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று
பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார்.
25
3594
ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய
ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம்
ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து.
26
3595
முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.
27
3596
நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம்
மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி
அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்.
28
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.4 தண்டியடிகள் புராணம்
3597
தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக்
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.
1
3598
காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே
பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர்
சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார்.
2
3599
பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில்
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி
நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில்.
3
3600
செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால்
அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார்.
4
3601
குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின்
இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய்
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார்.
5
3602
நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி
அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி
எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார்
மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார்.
6
3603
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம்
தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்
பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி
ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார்.
7
3604
அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார்
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன
மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார்.
8
3605
வில்லால் எயில் மூன்று எரித்தபிரான்
    விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறுகாணேன் யான்
    அதுநீர் அறிதற்கார் என்பார்
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும்
    கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால்
    என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார்.
9
3606
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து
    அருளால் கண் நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூரினில் நாங்கள்
    பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டு கைகளால்
    கொட்டை வாங்கிக் கருத்தின் வழித்
தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார்
    தங்கள் தலை பறித்தார்.
10
3607
வெய்ய தொழிலார் செய்கையின் மேல்
    வெகுண்ட தண்டி அடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின்
    முன் வந்து இறைஞ்சி
ஐயனே இன்று அமணர்கள் தாம்
    என்னை அவமானம் செய்ய
நைவது ஆனேன் இது தீர நல்கும்
    அடியேற்கு என வீழ்ந்தார்.
11
3608
பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது
அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள்
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார்.
12
3609
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்.
13
3610
தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக்
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித்
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்.
14
3611
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார்.
15
3612
மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத்
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப்
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி.
16
3613
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல்
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்.
17
3614
அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார்
மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர்.
18
3615
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார்
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார்.
19
3616
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான்.
20
3617
தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர்
அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக்
கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி.
21
3618
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார்
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பாமதி-கெட்டீர்
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார்.
22
3619
பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார்
காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார்.
23
3620
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம்
சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான்.
24
3621
மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே
உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்.
25
3622
கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட
எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர்
உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம்.
26
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.5 மூர்க்க நாயனார் புராணம்
3623
மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்
நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு.
1
3624
செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார்.
2
3625
கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்.
3
3626
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்.
4
3627
இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார்.
5
3628
அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார்.
6
3629
பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் ¦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில்.
7
3630
இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார்.
8
3631
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில்.
9
3632
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்
காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்.
10
3633
நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும்
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின்
பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார்.
11
3634
வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

6.6 சோமாசி மாற நாயனார் புராணம்
3635
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார்.
1
3636
யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்.
2
3637
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்.
3
3638
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்.
4
3639
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்.
5
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
3640
பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே.
6
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com